டெல்லி மாநிலத்தின் ஏழாவது முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் இன்று பதவியேற்றுள்ளார். அவருடன் மணீஷ் சிசோடியா, ராக்கி பிர்லா, சவுரவ் பரத்வாஜ், சோம்நாத் பார்தி, சத்யேந்திர குமார் ஜெயின், கிரீஷ் சோனி ஆகிய ஆறு பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், அவர்களுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
டெல்லி முதல்வராக பதவியேற்றதும் விழா மேடையில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், ஆம் ஆத்மி கட்சியை, தேர்வு செய்த டில்லி மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நேர்மையாக செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது. தற்போது தான் எங்களின் உண்மையான போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. இன்று நானும், அமைச்சர்களும் மட்டும் பதவியேற்கவில்லை. மக்களும் என்னுடன் இணைந்து பதவியேற்றுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த இடத்தில்தான் ஹசாரேயுடன் இணைந்து போராட்டத்தை துவக்கினேன். இது போன்ற புரட்சி நடக்கும் என கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. மக்கள் இல்லாமல் நாம் ஆட்சியை நடத்த முடியாது.
டெல்லியில் அதிகாரிகள், போலீசாரின் ஆட்சி இங்கு நடக்காது. மக்களை வைத்துதான் ஆட்சி நடத்துவோம். மின்கட்டணம் 50 சதவீதமாக குறைக்கப்படும். பார்லி., தேர்தலை எதிர்கொள்ள ஆம்ஆத்மி கட்சி தயாராக இருக்கிறது. அழுக்கு நிறைந்ததாக அரசியல் உள்ளது என அன்னா ஹசாரே கூறியுள்ளார். இந்த அழுக்கை நீக்கிட பாடுபடுவோம். எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள ஆம்ஆத்மி தயாராக உள்ளது. எந்தவொரு மிரட்டலுக்கும் பயப்பட மாட்டோம். ஊழலை ஒழிக்க அயராது பாடுபடுவோம். ஊழல்வாதிகள் மீது கடும் நடடிக்கை எடுப்போம். பா.ஜ., தலைவர் ஹர்சவர்த்தன் எங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். நாட்டில் முழு சுதந்திரம் கிடைக்க பாடுபடுவோம். இவ்வாறு கெஜ்ரிவால் பேசினார்.
|