ரயில்களில் மக்கள் கூட்டம் இருந்தும் போதிய வருவாய் வருவதில்லை என அரசு கவலை பட்டுவரும் நிலையில், வட மாநிலங்களில் ரயிலில் பயணச்சீட்டு எடுக்காமல் பயணம் செய்வோரைக் காப்பாற்ற நூதன முறையில் மோசடிகள் அரங்கேறத் துவங்கியுள்ளன.
ரயில்வே துறையின் வருவாயை பெருக்க, மத்திய அரசு, புதிய ரயில்கள், புதிய ரயில்வே வழித்தடங்கள் என பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் இந்த புதிய திட்டங்களுக்கு ஏற்ப பணியாளர்களை நியமிப்பதில்லை என பலதரப்பில் இருந்து புகார்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் ரயில்வே துறையில் வட மாநிலங்களை விட தென் மாநிலங்களில் குறைவான ரயில்களில் அதிகமான வருவாய் கிடைக்கிறது. இதற்கு காரணம் வட மாநிலங்களில் ரயிலில் பயணிப்போர் சிலர் பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயனிப்பதேயாகும்.
மும்பை போன்ற பெருநகரங்களில் பயணச்சீட்டு எடுக்காமல் செல்வோரைக் காப்பாற்றுவதற்கென்றே பல நூதன முறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளன, இவற்றில் ஒன்றுதான், இன்சூரன்ஸ் முறை. இந்த முறைப்படி, தினமும் பயணம் செய்யும் ரயிலில், முன் பதிவு இல்லாத இரண்டாம் வகுப்பில் பயணம் செல்வோர், டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை; அதற்கு செலவாகும் தொகையில், பாதிக்கும் குறைவான தொகையை இன்சூரன்ஸ் கும்பலுக்கு தவணையாக ஆகச் செலுத்த வேண்டும்; அதன்பின், அந்த ரயிலில் டிக்கெட் இன்றி பயணம் செய்யலாம். டிக்கெட் பரிசோதகர் யாரிடம் அந்த பாலிசிதாரர் சிக்கினாலும் கவலைப்பட வேண்டியதில்லை; டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை இன்சூரன்ஸ் கும்பல் செலுத்தி விடும்; இல்லாவிடில், அந்தத் தொகையை செலுத்தி விட்டு, அந்த ரசீதைக் காண்பித்தால், அபராதத்தொகையை இன்சூரன்ஸ் கும்பல் வழங்கி விடும். டிக்கெட் பரிசோதகர்களின் எண்ணிக்கை குறைவே இவர்களின் தொழில் முதலீடாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். வட மாநிலங்களில் பிரபலமடைந்த இந்த இன்சுரன்ஸ் கும்பல் தற்போது தென் மாநிலங்களிலும் காலடி எடுத்துவைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
|