வேலிஅம் குறுஞ்சூல் விளைகாய்ப் பஞ்சினம் பெருவெள் ளிடையில் சிறுகால் பட்டென நிறைநாண் வேலி நீங்கித் தமியே ஓர்உழி நில்லாது அலமரல் கொள்ளும்என் அருந்துணை நெஞ்சிற்கு உறும்பயன் கேண்மதி (5)
மண்ணுளர் வணங்கும் தன்னுடைத் தகைமையும் இருளரு புலனும்மெய்ப் பொருள்அறி கல்வியும் அமரர்பெற் றுண்ணும் அமுதுருக் கொண்டு குறுஞ்சொல் குதட்டிய மழலைமென் கிளவியில் விதலைஉள் விளைக்கும் தளர்நடைச் சிறுவனும் (10)
நின்நலம் புகழ்ந்துணும் நீதியும் தோற்றமும் துவருறத் தீர்ந்தநம் கவர்மனத்து ஊரன் பொம்மல்அம் கதிர்முலை புணர்வுறும் கொல்எனச் சென்றுசென்று இரங்கலை அன்றியும் தவிர்மோ நெட்டுகிர்க் கருங்கால் தோல்முலைப் பெரும்பேய் (15)
அமர்பெற்று ஒன்னலர் அறிவுறப் படர, பேழ்வாய் இடாகினி கால்தொழுது ஏத்திக் கையடை கொடுத்த வெள்நிண வாய்க்குழவி ஈமப் பெருவிளக்கு எடுப்ப மற்றதன் சுடுபொடிக் காப்புடல் துளங்கச் சுரிகுரல் (20)
ஆந்தையும் கூகையும் அணிஓல் உறுத்த ஓரிபாட்டு எடுப்ப உவணமும் கொடியும் செஞ்செவிச் சேவல் கவர்வாய்க் கழுகும் இட்டசெய் பந்தர் இடைஇடை கால்என பட்டுலர் கள்ளிஅம் பால்துயில் கொள்ளும் (25)
சுள்ளிஅம் கானிடை சுரர்தொழுது ஏத்த மரகதத் துழாயும் அந்நிறக் கிளியும் தோகையும் சூலமும் தோளில் முன்கையில் மருங்கில் கரத்தில் வாடாது இருத்தி போர்வலி அவுணர் புகப்பொருது உடற்றிய (30)
முக்கண் பிறைஎயிற்று எண்தோட் செல்வி கண்டுளம் களிப்ப கனைகழல் தாமரை வானக வாவி யூடுற மலர ஒருதாள் எழுபுவி உருவத் திண்தோள் பத்துத் திசையுள் எட்டவை உடைப்ப (35)
ஒருநடம் குலவிய திருவடி உரவோன் கூடல்அம் பதியகம் போற்றி நீடநின் றெண்ணார் உளமென நீயே. (38)
|