உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண்.
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவை போல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன் செய்யும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
முகத்து உளபோல் எவன் செய்யும் - கண்டார்க்கு, முகத்தின்கண் உளபோலத் தோன்றல் அல்லது வேறு என்ன பயனைச் செய்யும்; அளவினால் கண்ணோட்டம் இல்லாத கண் - அளவிறவாத கண்ணோடுதலை உடைய அல்லாத கண்கள். ('தோன்றல்', 'அல்லது' என்னும் சொற்கள் அவாய் நிலையான் வந்தன. கழிகண்ணோட்டத்தின் நீக்குதற்கு 'அளவினான்' என்றார். 'ஒரு பயனையும் செய்யா' என்பது குறிப்பெச்சம்.)
மணக்குடவர் உரை:
அவரவர் வாழ்வு காரணமாகக் கண்ணோடுதலைச் செய்யாத கண்கள், முகத்தின்கண் உள்ளனபோன்று இருப்பதன்றி வேறென்ன பயனைச் செய்யும்?
அளவென்றது தகுதியை. இது தனக்கும் பயன்படாதென்றது
தேவநேயப் பாவாணர் உரை:
அளவினாற் கண்ணோட்டம் இல்லாத கண்- தகுந்த அளவிற்குக் கண்ணோட்ட மில்லாத கண்கள்; முகத்து உளபோல் எவன் செய்யும்- முகத்தில் உள்ளன போல் தோன்றுவதல்லது வேறென்ன பயன்தரும்?
குருட்டுக் கண்ணிற்கும் கண்ணோட்ட மில்லாத கண்ணிற்கும் வேறுபாடில்லை .' எவன் செய்யும்? என்னும் வினா எதிர்மறை விடையை நோக்கிற்று.போதா அளவினின்று நீக்குதற்கு 'அளவினான் ' என்றார்.
கலைஞர் உரை:
அகத்தில் அன்பையும் இரக்கத்தையும் சுரக்கச் செய்யாத கண்கள்
முகத்தில் உள்ளவைபோல் தோன்றுவதைத் தவிர, வேறு எந்தப் பயனும்
இல்லாதவைகளாகும்.
சாலமன் பாப்பையா உரை:
வரம்பிற்கு உட்பட்ட கண்ணோட்டம் இல்லாத கண், முகத்தில் இருப்பது போல் இருக்கிறதே தவிர, அதனால் வேறு என்ன பயன் உண்டு?.
Translation
The seeming eye of face gives no expressive light,
When not with duly meted kindness bright.
Explanation
Beyond appearing to be in the face, what good do they do, those eyes in which is no well-regulated kindness ?.
Transliteration
Ulapol Mukaththevan Seyyum Alavinaal
Kannottam Illaadha Kan
திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்