திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவைகளைக் (கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்ல முடியாதவர், உயிரோடு வாழ்ந்தலும் இறந்தவர்க்கு ஒப்பாவர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
களன் அஞ்சிக் கற்ற செலச் சொல்லாதார் - அவைக்களத்தை அஞ்சித் தாம் கற்றவற்றை அதற்கு ஏற்கச் சொல்ல மாட்டாதார்; உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் - உயிர் வாழ்கின்றாராயினும் உலகத்தாரால் எண்ணப்படாமையின் இறந்தாரோடு ஒப்பர்.(ஈண்டுக் 'களன்' என்றது ஆண்டிருந்தாரை. இவை ஐந்து பாட்டானும் அவைஅஞ்சுவாரது இழிவு கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
உளராயினும் செத்தாரோடு ஒப்பார்: அவைக்களத்தை அஞ்சித் தாம் கற்றதனை அதற்கு இசையச் சொல்லமாட்டாதார். இது செத்தாரோடு ஒப்பரென்றது. இவை ஐந்தும் அவையஞ்சுதலான் வருங்குற்றம்கூறின
தேவநேயப் பாவாணர் உரை:
கற்ற களன் அஞ்சிக் செலச்சொல்லாதார் - தாம் கற்றவற்றை அவைக்கஞ்சி அதற்கேற்பச் சொல்ல மாட்டாதார்; உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் -உடலோடு கூடியுள்ளாரெனினும் உயர்ந்தோர் கருத்தில் இறந்தாரோ டொப்பர். களம் என்பது அவையையும் அவையிருந்த இடத்தையுங் குறிக்கும். ஆதலால் "ஈண்டுக் களனென்றது ஆண்டிருந்தாரை" என்னும் பரிமேலழகர் கூற்று வேண்டியதில்லை. இவ்வைங்குறளாலும் அவையஞ்சுவாரது இழிவு கூறப்பட்டது. உறுப்பியலின் முதற்பகுதியான அமைச்சியல்( அதி. 64-73) முற்றும்.
கலைஞர் உரை:
தாம் கற்றவைகளைக் கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல் அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும்கூட இறந்தவருக்குச் சமமானவராகவே கருதப்படுவார்கள்.