ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான வாக்கெடுப்பில் இந்தியா 188 வாக்குகள் பெற்று உறுப்பினராக இடம் பிடித்துள்ளது.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் புதிய உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க ஐ.நா. தலைமையகத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடந்தது. இதில் உறுப்பினராவதற்கு குறைந்தபட்சம் 97 வாக்குகள் தேவை. ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான வாக்கெடுப்பில் இந்தியா 188 வாக்குகள் பெற்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் உறுப்பினராக இடம் பிடித்து உள்ளது.
இதன் மூலம் அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் 3 ஆண்டுகளுக்கு இந்தியா மனித உரிமை ஆணையத்தின் உறுப்பினராக இருக்கும். இது தொடர்பாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் தூதுவர் சையது அக்பருதீன், ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது என்று கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சிலில் இடம் பெறுவதற்கான போட்டியில் இந்தியா 193க்கு 188 வாக்குகள் பெற்று தேர்வாகியுள்ளது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|