LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1090 - களவியல்

Next Kural >

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
கள், தன்னை உண்டவரிடத்தில் அல்லாமல் காமத்தைப் போல் தன்னைக் கண்டவரிடத்தில் மயக்கத்தை உண்டாக்குவதில்லையே.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(தலைமகள் குறிப்பறிதல் உற்றான் சொல்லியது.) அடுநறா - அடப்படும் நறா; உண்டார்கண் அல்லது - தன்னை உண்டார் மாட்டு மகிழ்ச்சியைச் செய்வதல்லது; காமம்போல் கண்டார் மகிழ் செய்தல் இன்று - காமம்போலக் கண்டார் மாட்டு மகிழ்ச்சியைச் செய்தல் உடைத்தன்று. (அடுநறா: வெளிப்படை. 'காமம்' என்றது ஈண்டு அது நுகர்தற்கு இடனாகியாரை. 'கண்டார்கண்' என்னும் ஏழாவது இறுதிக்கண் தொக்கது. மகிழ் செய்தற்கண் காமம் நறவினும் சிறந்ததே எனினும்,இவள் குறிப்பு ஆராய்ந்து அறியாமையின், 'யான் அதுபெற்றிலேன்' எனக் குறிப்பெச்சம் வருவித்துரைக்க. 'அரிமயிர்த் திரள் முன்கை'(புறநா.11)என்னும் புறப்பாட்டிற் குறிப்புப் போல.)
மணக்குடவர் உரை:
அடப்பட்ட நறவு, உண்டார்மாட்டல்லது காமம் போலக் கண்டார் மாட்டு மகிழ்வு செய்தலின்று. இது தலைமகள் தலைமகனைக் கண்டுழி வருத்தமுற்றுக் கருதியது.
தேவநேயப் பாவாணர் உரை:
[தலைமகள் குறிப்பறிதலுற்றான் சொல்லியது] அடுநறா- காய்ச்சப்படும் இனிய மது; உண்டார் கண் அல்லது- தன்னைப் பருகினவருக்கன்றி; காமம்போல் கண்டார் மகிழ் செய்தல் இன்று- காதலிக்கப்பட்ட பெண்போலத் தன்னைப் பார்த்தவருக்கும் மகிழ்ச்சி தருதலில்லை. அடுநறா, சுவையும் மணமும் மிக்கனவும் உடம்பிற்கு உரஞ்செய் வனவும் சிறிது மயக்கந்தருவனவுமாக, கூலங்களினின்றும் கனிகளினின்றும் காயச்சரக்குகள் சேர்த்துக் காய்ச்சி யிறக்கப்படும் மட்டு வகைகள். மகிழ் என்பது, களி என்னுஞ்சொற்போல இன்பத்தையும் மயக்கத்தையும் உணர்த்தும். காமம் என்றது இங்கு அதை நுகர்தற்கு இடமானவரை. அவர் ஆடவர்க்குப் பெண்டிரும் பெண்டிர்க்கு ஆடவருமாவர். கண்டார் கண் என்பதிற் கண்ணென்னும் இடப்பொருளுருபு தொக்கது. இவள் காதற் குறிப்பை இன்னும் அறியாமையால் கண்டாரின்பமே யன்றி உண்டாரின்பம் யான் பெற்றிலேன் என்பது குறிப்பெச்சம்.
கலைஞர் உரை:
மதுவை உண்டால்தான் மயக்கம் வரும்; ஆனால், கண்டாலே மயக்கம் தருவது காதல்தான்.
சாலமன் பாப்பையா உரை:
காய்ச்சப்பட்ட கள், உண்டவர்க்கே மகிழ்ச்சி தரும்; காதலைப் போல், காண்பவருக்கும் அது மகிழ்ச்சி தருவது இல்லை.
Translation
The palm-tree's fragrant wine, To those who taste yields joys divine; But love hath rare felicity For those that only see!.
Explanation
Unlike boiled honey which yields delight only when it is drunk, love gives pleasure even when looked at.
Transliteration
Untaarkan Alladhu Atunaraak Kaamampol Kantaar Makizhseydhal Indru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >