LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1200 - கற்பியல்

Next Kural >

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
நெஞ்சமே! நீ வாழி! அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த துன்பத்தைச் சொல்கின்றாய்! அதை விட எளிதாகக் கடலைத் தூர்ப்பாயாக.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(தலைமகன் தூது வரப்பெறாது தான் தூதுவிடக் கருதியாள் நெஞ்சோடு சொல்லியது.) உறார்க்கு உறுநோய் உரைப்பாய் நெஞ்சு - நின்னோடு உறாதார்க்கு நின் நோயை உரைக்கலுற்ற நெஞ்சே; கடலைச் செறாய் - நீ ஆற்றாயாயினும் அரிதாய அதனையொழிந்து, நினக்குத் துயரஞ் செய்கின்ற கடலைத் தூர்க்க முயல்வாயாக, அஃது எளிது. (உரைக்கலுற்றது அளவிறந்த நோயாகலானும், கேட்பார் உறவிலராகலானும், அது முடிவதொன்று அன்று; முடிந்தாலும் பயன் இல்லை என்பது கருதாது, முயலாநின்றாய் என்னும் குறிப்பான், 'வாழிய' என்றாள்.)
மணக்குடவர் உரை:
நெஞ்சே! நம்மோடு அன்புற்றார்க்குத் தூது விட்டாலும் பயனில்லை யென்று உன்னோடு உறாதார்க்கு நீயுற்ற நோயைச் சொல்ல நினையா நின்றாய்: நம்மை உறங்காமல் வருத்துகின்ற கடலைத் தூர்ப்பாயாயின் அஃது அதனினும் நன்று. இது தூதுவிடக் கருதிய நெஞ்சுக்குத் தூதுவிட்டாலும் பயனில்லை யென்று தலைமகள் கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
(தலைமகன் தூதுவரப்பெறாது தான் தூதுவிடக் கருதியாள் நெஞ்சொடு சொல்லியது.) உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் நெஞ்சு-உன்னோடு உறவுகொள்ளாதார்க்கு நீ உற்ற நோயைச் சொல்லக்கருதும் நெஞ்சே!; கடலைச்செறாய்-அவ்வருஞ் செயலை விட்டுவிட்டு உனக்குத் துயர் விளைக்குங்கடலைத் தூர்க்க முயல்வாயாக. அது உனக்கு எளிது; வாழிய- நீ நீடுவாழ்க! நீ சொல்லக் கருதிய செய்தி நீள்பெரு நோயாதலானும், அதைக்கேட்பார் உறவிலராதலானும் உன்தூது செயற்கரியதும் பயனில் முயற்சியுமாகும். ஆதலால், அதை விட்டுவிட்டுப் பயனுள்ள வேறுவினை ஏதேனும் மேற்கொள்க என்பதாம். நீடுவாழும் நிலைமையில்லாததாகக் கருதி 'வாழிய' என வாழ்த்தினாள். 'உறாஅர்' 'செறாஅஅய்' இசைநிறை யளபெடைகள். ஆசிரியர் வாழ்நாள் முழுதும் பிரியாத ஒரு மனைவி வாழ்க்கையையே இங்கெடுத்துக் கூறுவதாலும், கற்பியலை ஊடலுவகையில் முடிப்பதாலும், இவ்வதிகாரத்திற் கணவனை அன்பிலியாகக் கூறியிருப்பதெல்லாம், பெண்பாவின் மென்மையும் மடமையும் பற்றிய உயர்வுநவிற்சியே என அறிந்துகொள்க.
கலைஞர் உரை:
நெஞ்சமே! நீ வாழ்க! உன்னிடம் அன்பு இல்லாதவரிடம் உனது துன்பத்தைச் சொல்லி ஆறுதல் பெறுவதைக் காட்டிலும் கடலைத் தூர்ப்பது எளிதான வேலையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
நெஞ்சே நீ வாழ்க! பாவம், நீ ஏன் உன்னோடு உறவில்லாதவர்க்கு உன் அளவற்ற துன்பத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறாய்? (அதற்குப் பதில்) உன்னைத் துன்புறுத்தும் கடலைத் தூர்க்க முயற்சி செய்; அது முடியும்.
Translation
Tell him thy pain that loves not thee? Farewell, my soul, fill up the sea!.
Explanation
Live, O my soul, would you who relate your great sorrow to strangers, try rather to fill up your own sea (of sorrow).
Transliteration
Uraaarkku Urunoi Uraippaai Katalaich Cheraaaai Vaazhiya Nenju

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >