பிறந்த வீட்டிலும் இன்பம் இல்லை - தாயே
புகுந்த வீட்டிலும் இன்பம் இல்லை!
நீ உழைத்து உழைத்து உடம்பு இழைத்தும் - ஒருவேளை
உணவுக்கும் வழி இல்லை!
ஒருவேளை உணவு கிடைத்தாலும் - அதை
இருவேளையாக்கி எனக்குத் தந்தாய்!
முழுதாய் நீயும் விரதம் இருந்து - என்னை
முழு மனிதனாய் ஆக்க வந்தாய்!
சாமின்னா சாமி என் தகப்பன்சாமி
தினம் கஷ்டப்பட்டே என்ன வளர்த்த சாமி!
பூமியும் பெரிதாய் தோணவில்லை
அவர் மார்பில் தலை சாயும் நேரத்திலே!
காற்றிலும் மழையிலும் வளர்ந்த மரமாய்
கஷ்டமும் நஷ்டமும் கடந்து நின்று
சேற்றிலே காலை தினம் வைத்து
என்னைப் பள்ளியில் சேர்த்து மகிழ்ந்த தந்தை!
மானமும் மனிதமும் போனதில்லை
என்றும் மனசும் உடஞ்சு போனதில்லை!
என்னைக்கும் என்றும் குறைவும் இல்லை
அவங்க மகன்மேல வைத்த நம்பிக்கையிலே!
கர்ணனும் உறவு என் அண்ணனுக்கு
அவர் தம்பியாய் பிறந்ததே என் சிறப்பு!
நான் கற்றது எல்லாம் அவரிடமே
என் கையினில் என்றும் அவர் முகமே!
எப்படி நானும் வளர்ந்து மரமானேன்
என் நரம்பினில் இத்தனை பேரும் உரம்தானே!
|