LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 933 - நட்பியல்

Next Kural >

உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் ஒரு பொருளை இடைவிடாமல் கூறி சூதாடினால், பொருள் வருவாய் அவனை விட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சேரும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
உருள் ஆயம் ஓவாது கூறின் - உருளும் கவற்றின்கண் பட்ட ஆயத்தை இடைவிடாது கூறிச் சூதாடுமாயின்; பொருள் ஆயம் போஒய்ப் புறமே படும் - அரசன் ஈட்டிய பொருளும் அவன் பொருள் வருவாயும் அவனை விட்டுப்போய்ப் பகைவர் கண்ணே தங்கும். (கவற்றினது உருட்சியை அதனினாய ஆயத்தின்மேல் ஏற்றியும், சூதாடலை அது கூறலாகிய காரணத்தின்மேலிட்டும் கூறினார். பொருளாயம் என்பது உம்மைத்தொகை. ஆயம் - வடமொழித் திரிசொல், காத்தற்கண்ணும் இயற்றற் கண்ணும் கருத்திலனாகலின் அவை இரண்டும் பகைவர்பாற் செல்லும் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
புரளும் கவற்றை இடைவிடாது எக்காலத்தும் கூறுவானாயின், பொருள்வரவு தன்னைவிட்டுப் போய்ப் பிறர்பாற் செல்லும்.
தேவநேயப் பாவாணர் உரை:
உருள் ஆயம் ஓவாது கூறின்-ஒருவன் உருள்கின்ற கவற்றொடு சேர்த்த பணையத்தை இடைவிடாது சொல்லிச் சூதாடுவானாயின்; பொருள் ஆயம் போய்ப் புறமே படும்-அவன் தேடிய செல்வமும் பொருள்வருவாயும் அவனை விட்டு நீங்கி எதிரிகளிடம் போய்ச் சேரும். 'ஆயம்' இரண்டனுள் முன்னது சூதாட்டைக் குறித்தது; தாயம் என்னும் சொல்லின் திரிபு : பின்னது வருவாயைக் குறித்தது; வா என்னும் சொல்லினின்று திரிந்தது. 'உருளாயம்' வினைத்தொகை. 'பொருளாயம்' உம்மைத்தொகை. ஆயம் என்னும் சூதாட்டுப் பெயர் உருள் என்னும் அடையால் சூதாட்டுக் கருவியையும், கூறின் என்னும் வினையால் பணையத்தையும், குறித்து இருமடியாகு பெயராயிற்று. பணையம் பந்தயப் பொருள்; வட்டினியென்றும் பெயர்பெறும். ஒவ்வொரு சூதாட்டத்திலும் பணையங் கூறிய பின்னரே காய்களைப் பாய்ச்சுதலால், அக் கூற்றுக் கருவியொடு சார்த்திக் கூறப்பட்டது. 'போஒய், இசைநிறையளபெடை. பொருள்களையெல்லாம் பணையமாக வைத்துத் தோற்றபின், அவற்றின் வருவாய்களையும் வைப்பது வழக்கமாதலின், 'பொருளாயம்......புறமே படும்' என்றார். " 'ஆயம்' வடமொழித் திரிசொல்." என்பது பரிமேலழகர் நச்சுக் கூற்று. ஏகாரம் பிரிநிலை.
கலைஞர் உரை:
பணயம் வைத்து இடைவிடாமல் சூதாடுவதை ஒருவன் பழக்கமாகவே கொள்வானேயானால் அவன் செல்வமும் அந்தச் செல்வத்தை ஈ.ட்டும் வழிமுறையும் அவனைவிட்டு நீங்கிவிடும்.
சாலமன் பாப்பையா உரை:
சூதாட்டத்தில் பெற்ற லாபத்தை ஓயாமல் சொல்லிச் சூதாடினால் உள்ள பொருளும், அதனால் வரும் லாபமும் அடுத்தவர் வசம் அகப்பட்டுவிடும்.
Translation
If prince unceasing speak of nought but play, Treasure and revenue will pass from him away.
Explanation
If the king is incessantly addicted to the rolling dice in the hope of gain, his wealth and the resources thereof will take their departure and fall into other's hands.
Transliteration
Urulaayam Ovaadhu Koorin Porulaayam Pooip Purame Patum

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >