LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 921 - நட்பியல்

Next Kural >

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
கள்ளின் மேல் விருப்பம் கொண்டு நடப்பவர், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார், தமக்கு உள்ள புகழையும் இழந்து விடுவார்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
கள் காதல் கொண்டு ஒழுகுவார் - கள்ளின்மேற் காதல் செய்தொழுகும் அரசர்; எஞ்ஞான்றும் உட்கப்படார் - எஞ்ஞான்றும் பகைவரான் அஞ்சப்படார்; ஒளி இழப்பர் - அதுவே அன்றி முன் எய்திநின்ற ஒளியினையும் இழப்பர். (அறிவின்மையால் பொருள் படை முதலியவற்றாற் பெரியராய காலத்தும் பகைவர் அஞ்சார், தம் முன்னோரான் எய்தி நின்ற ஒளியினையும் இகழற் பாட்டான் இழப்பர் என்பதாம். இவை இரண்டானும் அரசு இனிது செல்லாது என்பது இதனான் கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
பிறரால் மதிக்கவும் படார், தோற்றமும் இழப்பர், எல்லா நாளும் கள்ளின்கண் காதல்கொண்டு ஒழுகுவார். இது மதிக்கவும் படார்: புகழும் இலராவரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
கள் காதல் கொண்டு ஒழுகுவார் - கள்ளின் மேற் பெருவிருப்பங்கொண்டு நடப்பவர்; எஞ்ஞான்றும் உட்கப்படார்-ஒருபோதும் பகைவரால் அஞ்சப்படார்; ஒளிஇழப்பர்- அதுவேயுமன்றித் தாம் பெற்றிருந்த நற்பெயரையும் இழப்பர். பேரரசராயினும் கள்ளுண்டு வெறித்த விடத்துச் சிறு பிள்ளையாலும் எளிதாய்க்கொல்லப் படுவராதலாலும், அந்நிலைமையடையுமாறு எவ்வேளையிலும் உட்பகைவராற் கள்ளூட்டப்படுவராதலாலும், எஞ்ஞான்றும் 'உட்கப்படார்' என்றும், ஒழுக்கக்கேடும் மானக்கேடும் பற்றி இகழப்படுவராதலால் 'ஒளியிழப்பர்' என்றும் கூறினார். 'படாஅர்' இசைநிறையளபெடை.
கலைஞர் உரை:
போதைப் பொருள் மீத எப்போதும் பெருவிருப்பம் கொண்டு இருப்பவரைக் கண்டு எவரும் பயப்படமாட்டார். வாழும் காலத்து மரியாதையும் இழந்த போவார்கள்.
சாலமன் பாப்பையா உரை:
மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் தமது சிறப்பை இழப்பது மட்டுமல்ல; மாற்றாரும் அவர்களைக் கண்டு அஞ்ச மாட்டார்கள்.
Translation
Who love the palm's intoxicating juice, each day, No rev'rence they command, their glory fades away.
Explanation
Those who always thirst after drink will neither inspire fear (in others) nor retain the light (of their fame).
Transliteration
Utkap Pataaar Oliyizhappar Egngnaandrum Katkaadhal Kontozhuku Vaar

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >