திருமலர் இருந்த முதியவன் போல நான்முகம் கொண்டுஅறி நன்னர் நெஞ்சிருந்து வேற்றருள் பிறவி தோற்றுவித் தெடுத்து நிலம்இரண் டளந்த நெடுமுகில் மான அரக்கர்தம் கூட்டம் தொலைத்து நெய்உண்டு (5)
களிற்றுரி புனைந்த கண்ணுதல் கடுப்ப அழலெடுத்து ஒன்னலர் புரம்எரி ஊட்டி இனையஎவ் வுலகும் தொழுதெழு திருவேல் சரவணத்து உதித்த அறுமுகப் புதல்வன் பரங்குன் றுடுத்த பயங்கெழு கூடல் (10)
பெருநகர் நிறைந்த சிறுபிறைச் சென்னியன் மால்அயன் தேடி மறைஅறைந்து அறியாத் தன்உரு ஒன்றில் அருள்உரு இருத்திய ஆதி நாயகன் அகல் மலர்க் கழல்இணை நண்ணலர் கிளைபோல் தன்மனம் திரிந்துநம் (15)
துறைவன் தணக்க அறிகிலம் யாமே பிணர்முடத் தாழை விரிமர் குருகென நெடுங்கழிக் குறுங்கயல் நெய்தலுள் மறைந்தும் புன்னைஅம் பொதும்பர்க் குழைமுகம் குழைமுகம் கருந்திரை சுமந்தெறி வெண்தர ளத்தினை (20)
அரும்பெனச் சுரும்பினம் அலரநின் நிசைத்தும் கலம்சுமந் திறக்கும் கரியினம் பொருப்பென பருகிய முகிற்குலம் படிந்துகண் படுத்தும் பவளநன் கவைக்கொடி வடவையின் கொழுந்தென சுரிவளை குளிக்குநர் கலனிடைச் செறிந்தும் (25)
வெள்ளிற உண்ண விழைந்துபுகு குருகினம் கருங்கழி நெய்தலைக் காவல்செய் கண்என அரவுஎயிற்று அணிமுள் கைதையுள் அடங்கியும் விண்தொட எழுந்து விழுதிரைக் குழுவினைக் கடல்வயிற்று அடங்கிய மலையினம் வரவுஎன (30)
குழிமணற் கேணியுள் கொம்பினர் படிந்தும் முயங்கிய உள்ளம் போகி மயங்கிய துறையினம் ஒருங்குழி வளர்ந்தே. (33)
|