|
||||||||
வகுப்பறை உருவாக்கும் சமூகம் -1 : தொடர் அறிமுகம் |
||||||||
திருமதி.சசிகலா உதயகுமார், பள்ளி ஆசிரியை
சன்னதி நிதி உதவி ஆரம்பப்பள்ளி,
வந்தவாசி, திருவண்ணாமலை மாவட்டம் ,
"இது எங்கள் வகுப்பறை" - நூலாசிரியர்.
"மனிதன் ஒரு சமூக விலங்கு" என்றார் கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில். உயிரினங்களின் வரிசையில் பகுத்து சிந்திக்கத் தெரிந்த விலங்கினம் மனிதன். அந்த சிந்தனாசக்திதான் ஒவ்வொரு படிநிலையாக அவனை வளர்த்தெடுத்து இன்று பூமி எனும் கிரகத்தினை முழுக்கத் தன்வயப்படுத்தி, இந்தப்பந்தில் வாழும் விலங்கின வரிசையில் முதல் விலங்கினமாகத் திகழ்கிறான். கற்காலம் தொடங்கி அவன் கடந்துவந்த ஒவ்வொரு பரிணாம அடுக்கிலும் தன் தேவையும் சூழலும் கருதி கூட்டம் கூட்டமாக வாழ்ந்து வந்தான். அந்தக் கூட்டம் தான் ஒழுங்குபடுத்தப்பட்ட வடிவில் "சமூகம்" என்று அழைக்கப்படுகிறது.
வேட்டுவ சமூகம் கடந்து ஆற்றுப் படுகைகளின் ஓரத்தில் அவன் வேளான் சமூகமாக மாற ஆரம்பித்த காலத்தில் அவனின் சிந்தனை அடுத்த தளத்திற்கு உயர்கிறது. அவன் பேசிவந்த ஒலிகளின் கோர்வை ஒழுங்குபடுத்தப்பட்டு மொழி என்றாகிறது.
அந்த மொழி வழியே இதுவரை அவன் அனுபவத்தில் தெரிந்து புரிந்து அனுபவித்துச் சேர்த்த அத்தனை விஷயங்களையும் வரிசைப்படுத்தி தன் அடுத்த தலைமுறைக்கு ஒரு முறைப்படுத்தப்பட்ட வடிவில் கொண்டு செல்ல ஆரம்பிக்கிறான்.
வார்த்தைகளின் கோர்வையை பிரித்துப்போட்டு அதற்கென ஒரு வடிவத்தைக் கொடுத்து எழுத்து என்றாக்கினான். செவி வழியே வாழ்வியலைக் கடத்தியவன் அதை எழுத்துக்களின் கோர்வையாகப் பதிவுசெய்ய ஆரம்பிக்கிறான்.
இதற்கிடையே அவனின் செயல்பாடுகளை விவசாயம் - கலை - அறிவியல் என்று ஒவ்வொன்றாகப் பிரித்து ஒவ்வொன்றிலும் வளர ஆரம்பிக்கிறான்.
இவ்வாறாக ஒரு தலைமுறையின் வளர்ச்சி என்பது அதன் முந்தைய தலைமுறையின் அறிவைப் பெற்று , அதைவிடக் கூடுதலாக சிந்தித்து, தன் வாழ்வை மேம்படுத்தி, அதைப் பதிவு செய்து, அதை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவது என்பதை உண்ர்கிறான். அதற்கான ஒரு கடத்தியை உருவாக்குகிறான். அந்தக் கடத்திதான் "கல்வி".
கற்றுக் கொடுக்கும் இடத்தில் இருந்துதான் மனித நாகரிகம் அடுத்தடுத்த உயரங்களை எட்ட ஆரம்பித்தது. கற்றுத்தேர்ந்த அறிஞர்களைத் தேடிச் சென்று அவர்களுடன் வாழ்ந்து கற்றுக்கொள்ளும் முறை 18ம் நூற்றாண்டு வரை இருந்து வந்தது. ஆங்கிலேய ஆதிக்கம் வந்த பிறகு கல்விக் கூடங்களாக அவை உருமாறின.
கற்றுக் கொடுப்பவரும் கற்றுக் கொள்பவரும் ஓரிடத்திற்கு வந்து சேர்ந்தனர். கறுக்கொடுக்கும் மாணவர்கள் ஓர் அறையில் இருக்க, கற்றுக்கொடுப்பவர்கள் அந்த அறைக்கு வந்து அவர்கள் கற்றுத் தேர்ந்த பாடங்களை கற்றுக்கொடுத்துவிட்டுச் செல்லும் நடைமுறை உருவாக்கப்பட்டது. பல்வேறு துறைகளைப் பற்றி கற்பிக்கும் - கற்றுக்கொள்ளும் அந்த அந்த அறை "வகுப்பறை" எனப்பட்டது
குரு - சிஷ்யன் என்பது மாணவர் - ஆசிரியர் என்றானது. மாணவனின் வயதுக்கேற்ப பள்ளிக்கூடம் கல்லூரி என பிரிக்கப்பட்டு அவை நிறுவனங்களாகின. மாதா பிதா குரு தெய்வம் என்னும் வரிசையைக் கொண்டிருந்தாலும் இன்றைய சூழலில் ஒரு குழந்தை ஒரு நாளின் பெரும் பகுதியை அது பயிலும் பள்ளியின் வகுப்பறைகள் தான் அதிகம் ஆக்கிரமித்து இருப்பதை நாம் கண்கூடாகப் பார்க்கிறோம்.
எனவே இன்றைய நவீன உலகில், ஓர் சமூகத்தின் குணாதிசயமும் செயல்பாடும் அச்சமூகத்தின் வகுப்பறைகளில் இருந்து தான் தொடங்குகிறது என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது.
அப்படிப்பட்ட அதிமுக்கியமான வகுப்பறைகளில் ஒரு குழந்தை கற்றுக்கொள்வது என்ன? அல்லது அதற்குக் கற்றுக் கொடுக்கப்படுவது என்ன?
மொழி - கணிதம் - வரலாறு -புவியியல்- அறிவியல் போன்ற பாடங்களும், விளையாட்டு - ஓவியம் - இசை போன்ற கலைகளும் என்று சுருக்கமாகச் சொல்லி விடலாம்.
பாடங்களைக் கற்று மனனம் செய்து தேர்வுகள் எழுதி அடுத்தடுத்த வகுப்புகளுக்கு முன்னேறிச் செல்லுவது என்பதுதான் சரியான கல்வி முறையா?
பாடங்களும் அதன் தாக்கங்களும் ஒரு குழந்தைக்குத் தேர்வு வரைதான் உபயோகப்படுமா?
அல்லது அது வளர்ந்து ஒரு குறிப்பிட்ட பாடத்தில் உயர்கல்வி வரை தேர்ந்து , பின் அந்தப் பாடம் சார்ந்த பணி ஒன்றில் அமர்ந்து சம்பாதிப்பதுதான் வகுப்பறைக் கல்வியின் நோக்கமா?
இந்த சமூகத்தின் நிலையை நிர்ணயிக்கும் வகுப்பறைகள் "பாடம் கற்பித்தல்" என்ற ஒன்றை மட்டும் செய்தால் போதுமா?
வெறும் பாடங்களைக் கற்றுத் தேர்ந்தால் மட்டும் ஒரு மாணவன் அச்சமூகத்தின் சிறந்த பொறுப்புள்ள குடிமகனாகி விடுவானா?
பாடங்களையும் தாண்டி என்னென்ன கற்றுக்கொடுக்க வேண்டும்? கற்றுக்கொள்ள வேண்டும் ?
இன்றைய சூழலில் வகுப்பறைகளில் நிகழும் நிகழ்வுகள் என்னென்ன ? அவை எந்த அளவுக்கு இந்த சமூகத்திற்குப் பயன்படுகின்றன?
இப்படி அடுக்கடுக்கான கேள்விகள் ....
ஒரு சமூக மனநிலையின் ஆரம்பப்புள்ளி வகுப்பறை என்றால் அந்த வகுப்பறை என்பதும் ஒரு சமூகம் தானே?
ஒவ்வொன்றாகத் தேடுவோம் .. தெளிவோம்
(தொடரும்)
|
||||||||
by Swathi on 18 Mar 2018 6 Comments | ||||||||
கருத்துகள் | ||||||||||||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|