|
||||||||
வாக்கு Vs Vote |
||||||||
VOTE. இதன் பொருள், விருப்பமான ஒன்றைத் தேர்ந்தெடுத்தல் என்று ஆங்கில அகராதியில் பார்த்தேன். ஆனால் இது தமிழில்வாக்கு என்று சொல்லப்படுகிறது. வாக்கு என்ற வார்த்தை எத்தனை மகத்துவமானது என்று யோசிக்கிறேன். இந்த சொல், சத்தியம் என்று பொருள் படுகிறது. அவர்வாக்குக்கொடுத்தால் மீறமாட்டார் என்கிறோம். சத்தியவாக்கு, தெய்வவாக்கு என்றெல்லாம் சொல்கிறோம். இன்னும் எளிமையாகசொன்னால் இதற்கு உறுதியான, இறுதியான, நிலைமாறாத சொல் என்று பொருள். இது ஒரு புறம் இருக்கட்டும். "வாக்காளப் பெருமக்களே! உங்கள் பொன்னான வாக்குகளை "____" சின்னத்தில் அளிக்குமாறு" என்று ஒவ்வொருதனிமனிதனையும் பாத்து ஒரு வேட்பாளர் வேண்டுகோள் விடுக்கிறார். வேண்டுகோள் என்பது இரண்டு வகை. 1)தேர்தலுக்கு முன்வேட்பாளர் வாக்காளரிடம் வைக்கிறார், 2)தேர்தலுக்குப் பின் வாக்காளர் வேட்பாளரிடம் வைப்பார். இப்போது ஒரு வாக்காளருக்கும் வேட்பாளருக்கும் இடையில் வாக்கைப் பற்றிய எதார்த்தமான "வாக்கு"வாதம். வாக்காளர் : வேட்பாளரே... உம்மை இந்த ஊரில்தான் இருக்கிறீர் என்று தெரியும். அவ்வப்போது சில பொதுப்பிரச்சனைகளின்போதும், பொதுவேலைகளின்போதும் நீர் தலைமை தாங்கி நின்று பணி செய்வதைப் பார்க்கிறேன். ஆனால் உம்மையார் என்று எமக்குத் தெரியாது. உம்மைப் பற்றிக்கொஞ்சம் சொல்வீரா? வேட்பாளர் : நான் ______ தெருவில் வசிக்கிறேன். எனக்கென்று நிரந்தரமாக எந்த வேலையும் இல்லை. என்னை வீட்டில் "வெட்டிஆபிஸர்" என்று சொல்வார்கள். படிப்பும் சரியாக ஏறவில்லை. அதனால் அவ்வப்போது சில பொதுவேலைகளில் ஈடுபட்டேன். அதைகவனித்து வந்த என் சமூகத்தினர் சிலர், தங்களுக்கு ஒரு தேவை ஏற்பட்டபோது அதை என்னால் செய்து தரமுடியும் என்றபட்சத்தில் என்னை அணுக ஆரம்பித்தார்கள். நான் இவ்வாறு செய்து வருவதால் எனக்கு என்னுடைய தெருவில் குறிப்பாக நான்சார்ந்திருக்கும் _____ மதத்தினர் மற்றும் _____ ஜாதியினர் இடையில் நல்ல ஆதரவு உண்டு. அவர்களின் பக்க பலத்தால் நான்வேட்பாளராகி இப்போது உங்கள் முன் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன். வாக்காளர் : உமது தெருவை சொன்னீர், மதத்தை சொன்னீர், ஜாதியை சொன்னீர், உம்முடைய பட்டப்பெயரையும் கூட சொன்னீர்,உமது பெயரை சொல்லத் தோன்றவில்லையா?... அல்லது பெயரை விட மற்றவையெல்லாம் முக்கியமாகத் தோன்றியதா?... வேட்பாளர் : ஏற்கனவே எனக்கு வைக்கப்பட்ட பெயர் முக்கியமல்ல வாக்காளரே, இனி நான் பொதுவாழ்க்கையில் வாங்கப் போகும்பெயரும் புகழும், பதவியும்தான் எனக்கு முக்கியம். நீர் யார்?... வாக்காளர் : நானும் இதே தெருவில்தான் இருக்கிறேன். வேட்பாளர் : வாக்களிக்கும் தகுதி உமக்கு வந்துவிட்டதா?... வாக்காளர் : அப்படியென்றால்?... வேட்பாளர் : (அசட்டுச்சிரிப்புடன்)18 வயது நிரம்பிவிட்டதா?... வாக்காளர் : ம், சென்ற தேர்தலின் போதே அந்த தகுதி வந்துவிட்டது. உமக்கு வாக்கு கேட்கும் தகுதி வந்துவிட்டதா?... வேட்பாளர் : எமக்கு அது வந்து பல ஆண்டுகள் ஆகின்றன. வாக்காளர் : வயது மட்டும்தான் தகுதியா?... வேட்பாளர் ஆவதற்கு வேறு ஏதும் தகுதிகள் வேண்டாமா?... வேட்பாளர் : நீர் குதர்க்கமாய் ஏதோ சொல்லவருகின்றீர்... நான் முன் சொன்னதை நினைத்துப் பாரும். எந்த பிரதிபலனும்எதிர்பாராமல் சமூகத்திற்காகப் பல ஆண்டுகள் உழைத்திருக்கிறேன். அதுதான் வேட்பாளராகின்ற தகுதியை எனக்குத்தந்திருக்கிறது. வாக்காளர் : எனக்கு சில மாற்றுக் கருத்துக்கள் தோன்றுகின்றன. முதலாவது: பிரதிபலன் பாராமல் என்று நீர் சொன்னது தவறு. நீர்பெயரும், புகழும், பதவியும் வாங்குவதை மனதில் கொண்டுதான் நீர் பொதுவாழ்க்கையில் இறங்கியிருக்கிறீர். இரண்டாவது : உம்மையாரும் சொந்த வாழ்க்கையில் இருக்காதே, வேலைக்குப் போகாதே என்று ஒரு போதும் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. அதனால்பொதுவாழ்க்கைக்கு வந்தது உம்முடைய விருப்பமே அன்றி, எமது வேண்டுதல் அல்ல. மூன்றாவது : சமூகத்திற்கு என்று சொன்னீர்,அது உமது சமூகத்திற்கு என்பதில் நீர் கவனமாக இருக்கின்றீர். ஆக, இது முழுமையான பொதுநல நோக்கமும் அல்ல. இப்போதுசொல்லும், உமக்கு வேறு என்ன தகுதியிருக்கிறது?... வேட்பாளர் : (சில நிமிடங்கள் யோசித்துவிட்டு) நீர் என்ன ஜாதி? வாக்காளர் : ஏன்?... வேட்பாளர் : நீர் கேட்கும் கேள்விகளிலிருந்து உம்முடைய ஆதங்கம் என் மீது அல்ல, ஒட்டுமொத்த வேட்பாளர்களின் மீது என்பதுஎமக்குப் புரிகிறது. இந்த நிலையில் உம்முடைய சமூகத்தில்/ஜாதியிலிருந்து எப்படியும் ஒருவர் வேட்பாளர் ஆகியிருப்பார். அவரிடம்நீர் உமது கேள்விகளைக் கேட்டுப் பாரும். பதில் கிடைக்கலாம். வாக்காளர் : அப்படியானால் ஒரு வேட்பாளரோ, தலைவரோ அவரவர் ஜாதிக்காகவும், பிரிவினருக்காகவும்தான் பாடுபடுவார்என்றால், நான் எந்த ஜாதியையும் மதத்தையும் பிரிவையும் சார்ந்தவனல்ல, எனக்காக, என்னைப் போன்றவர்களுக்காக பொதுவானதலைவராக இருக்க, யாருக்குத்தான் தகுதி உண்டு? வேட்பாளர் : இந்த தலைமுறையில் அப்படியிருக்க யாருக்கும் தகுதியிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. வாக்காளர் : அப்படியென்றால் பொதுமக்களுக்காக உழைக்க யாரும் இல்லையா?... வேட்பாளர் : பொதுமக்கள் என்று சொல்வதே, பல பிரிவினர்கள் சேர்ந்ததுதான். ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒரு தலைவர் நிச்சயமாகஇருப்பார். வாக்காளர் : எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சரி, உமது பேச்சைக் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை. சரி, நீர்சென்ற தேர்தலிலும் வேட்பாளராக இருந்தீரா?... வேட்பாளர் : இருந்தேன். வாக்காளர் : எந்த கட்சி? வேட்பாளர் : "________ கட்சி" வாக்காளர் : அதற்கு முந்தைய தேர்தலில்?. வேட்பாளர் : "_______ கட்சி" வாக்காளர் : அதற்கு முன்?... வேட்பாளர் : "_______ கட்சி" (வாக்காளருக்கு தலை சுற்றுகிறது. வேறு வழியின்றி சமாளித்தபடி) வாக்காளர் : ஒரு தனிமனிதனாகிய நான், என்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதிலேயே முனைப்புடன் இருப்பதால், என்னால்பொது வேலைகளில் ஈடுபடமுடிவதில்லை. என்னோடு சேர்ந்து இன்னும் இருக்கிற பலரும் தங்கள் சொந்த வாழ்க்கையில் முழுநேரமும் இருப்பதால் ஊரைப்பற்றி, தேசத்தைப் பற்றிக் அக்கறை காட்ட முடிவதில்லை(எல்லோரும் ஜப்பானியர்களாகிவிடமுடியாது). அதனால் நானும், என் போன்ற பலரும் சேர்ந்து எங்களில் ஒருவராகிய, பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் உம்மைஎங்களின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்து, தலைமைப் பொறுப்பைக் கொடுப்பதற்கே நான் என்னுடைய (நீர் சொல்லுகிறபொன்னான) வாக்கை அளிக்கிறேன். என்னுடைய அந்த வாக்கை பெறுவதற்காக வேண்டி, நீர் எனக்கு சில வாக்குகளைவாக்குறுதிகளைத் தருகிறீர். வாக்கு என்பதே உறுதியான சொல் எனும்போது, வாக்குறுதி எப்படிப் பட்டது என்று சொல்லத்தேவையில்லை. நான் உமக்குக் கொடுத்த வாக்கை காப்பாற்றுகிறேன். நீர் எமக்குக் கொடுத்த வாக்குகள் என்ன ஆனதுவேட்பாளரே?... வேட்பாளர் : வாக்காளரே, இன்று முளைத்த செடிக்குக் காரணம், நேற்று நட்ட விதை. உமது இன்றைய கேள்விக்கு, நேற்றே பதில்இருக்கிறது. எப்படி என்கிறீரா? நான் வாக்குறுதி அளித்தேன். நீர் வாக்கை அளித்தீர். இந்த இரண்டு நிகழ்வுகள் மட்டும்நடந்திருந்தால் நீ கேட்கும் கேள்வியில் நியாயம் உண்டு. ஆனால் நான் உமக்கு அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையில் மட்டுமா,நீர் வாக்களித்தீர்? நம்மிருவருக்கும் இடையில் மேலும் சில பேரம் பேசுதல்கள், பரிமாற்றங்கள் நடந்திருக்கின்றன(அதை நான்சபையில் போட்டு உடைக்க விரும்பவில்லை, அது உமக்கும் சிக்கல்). அவ்வாறான பரிமாற்றங்களுக்குப் பிறகே நீர் வாக்கைஅளித்தீரே தவிர, என் வாக்குறுதிகளை எக்காலத்திலும் நீர் நம்பியதுண்டோ?... இது தவிர, உமது கேள்வியில் ஒரு கருத்தைப்பார்த்தேன். "என்னோடு சேர்ந்து இன்னும் இருக்கிற பலரும் தங்கள் சொந்த வாழ்க்கையில் முழு நேரமும் இருப்பதால்ஊரைப்பற்றி, தேசத்தைப் பற்றி அக்கறை காட்ட முடிவதில்லை" என்று. இறுதியில் முடிவதில்லை என்பதை விட,முயற்சிப்பதில்லை என்று சொல்லியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். அடைப்புக்குறிக்குள் ஜப்பானியரை வேறுஉதாரணம் சொல்கிறீர். அவர் ஒன்று விசேஷப் பிறவிகள் அல்ல. உமக்கு இருக்கிற அதே உறுப்புகள், அதே பொறுப்புகள்,ஆசாபாசங்கள், அதே இரண்டு கண்கள், இரண்டு கால்கள் இத்யாதி... அனைத்தும் ஜப்பானியருக்கும் உண்டு, இன்னும்சொல்லப்போனால் சராசரி மனிதரைவிட சில அங்குலங்கள் உயரம் குறைந்தவரே ஜப்பானியர்கள்.(இது அவரை இழிவுபடுத்தும்நோக்கத்தில் சொல்லப்பட்டதல்ல, எந்த விதத்திலும் நாம் அவரை விடக் குறைந்தவர் இல்லை என்பதற்காக சொல்லப்பட்டது).ஆனாலும் ஜப்பானியரை நீர் உதாரணம் சொல்லக்காரணம், ஜப்பானியர் எந்தக் கணத்திலும் தான் இன்ன ஜாதிக்காரராகவோ,இன்ன மதத்தவராகவோ, இன்ன சமூகத்தினராகவோ, இன்ன தரத்தினராகவோ இருப்பதைவிட, ஒரு ஜப்பானியராக இருப்பதையேமனப்பூர்வமாக விரும்புகிறார் என்பதையும், அதற்கு உதாரணமாக, ஒரு ரயிலில் இருக்கை கிழிந்திருந்தால் அதில் பயணம் செய்யும்ஒரு தொழிலதிபர் கூட தனக்கு கௌரவக் குறைவு என்று எண்ணாமல் அதை தைத்துவிட்டுப் போகும் அளவுக்குத் தன் நாட்டைநேசிக்கின்றனர் என்பதையும் நீர் அறிவீர். இது இருக்கட்டும். நம் விஷயத்தில் நடந்ததை யோசித்துப் பாரும். விலையைப் பெற்றீர்,வாக்கை விற்றீர் என்பதுதான் உண்மை. ஒருவேளை நான் கொடுக்கவில்லையென்றால், இன்னொருவரிடம் விலையைப்பெற்றுவிட்டு, அவருக்கு வாக்களித்திருப்பீர். ஆக மொத்தம், உமது இரண்டு கைகளும் நிரம்பிய பின்னர்தான், உமது ஒரு விரலைஎமக்காகத் தருகிறீர். அடுத்த கேள்வி?... வாக்காளர் : சபாஷ் வேட்பாளரே... உமது பதிலில் எமக்கொரு கேள்வி. இன்று நான் வாக்களிக்க, நேற்று நீர்விலைகொடுத்தீரென்றால் வாக்குக்கு விலைகொடுக்க முன்வந்தது நீர்தானே? தவிரவும், இதற்கு முந்தையதலைமுறைகளிலெல்லாம் வாக்களிப்பதற்கு எந்த விலையும் தரப்படவில்லை. நீர் மட்டும் விலை கொடுக்கக் காரணம்?... வேட்பாளர் : போட்டியாளர்கள் அதிகம். உம்மை எங்கள் பக்கம் ஈர்ப்பதற்கே இந்த தந்திரம். வாக்காளர் : போட்டி? பொது சேவை செய்வதற்கு போட்டியா?... தந்திரம்?... சேவை செய்யத்தானே வந்தீர், இதில் என்னய்யாதந்திரம்? நீர் உண்மையாய் உழைத்திருந்தால் உமக்கே பதவி. இதில் என்ன போட்டி? தந்திரம்?... உமது சேவையிலும், நீர் சொன்னஉமது சமூகத்தினர் மீதும் உமக்கு உள்ள நம்பிக்கை இவ்வளவுதானா?... இப்போது ஜெயிப்பதற்குப் போட்டி போடுகிறீர்,ஜெயித்தபின், தக்கவைப்பதற்குப் போட்டி போடுவீர். இப்படி போட்டிக்கும் தந்திரத்திற்குமிடையில் நீர் எமக்கு என்ன சேவைசெய்யப்போகிறீர்?... உமக்கு நான் ஏன் வாக்களிக்கவேண்டும்?... வேட்பாளர் : அந்த கவலை உமக்கு எதற்கு வாக்காளரே? நீர்தான் சொந்த வாழ்க்கையில் முழு நேரமும் இருப்பதால்ஊரைப்பற்றி, தேசத்தைப் பற்றி அக்கறை காட்ட முடிவதில்லை" என்று ஒதுங்கிவிட்டீரே, என் சேவைதான் உமக்குத்தேவையில்லையே?... நீர் அளிக்கவில்லையென்றாலும் உமது பெயரில் எமக்கு வாக்கு வந்து சேரும். ஜெயித்தால் பதவியும் வந்துசேரும். வாக்காளர் : அப்படியானால் என்னைப் போல் சொந்த வாழ்க்கையில் முழு நேரமும் இருக்கும் இன்னும் சில பேர் வாக்களிக்காமல்போனால்?... வேட்பாளர் : அந்த வாக்கும் எமக்கே... வாக்காளர் : பத்து பேர் நூறு பேரானால்?... வேட்பாளர் : அத்தனையும் எமக்கே... உமக்கு ஒரு கூடுதல் தகவல். தேசத்தின் தற்போதைய நிலை இதுதான்... உம்மைப் போன்றஆட்களின் வாக்கை நாங்கள் எதிர்பார்ப்பதில்லை. அது தானாகவே வரும். வேட்பாளர் : நூறு பேர் ஆயிரம் பேரானால்?... ஆயிரம் பத்தாயிரமானால்?... (வேட்பாளர் யோசிக்கிறார்) வாக்காளர் : எமது வாக்குக்கு விலை நிர்ணயிக்காத ஒரு நல்ல புதிய தலைவருக்கு வாக்களிக்க என்னைப் போன்றவர்கள் முடிவுசெய்தால்?... வேட்பாளர் தண்ணீர் குடிக்கிறார் வேட்பாளர் : அப்படி ஒரு நல்ல புதிய தலைவர் உங்களுக்கு கிடைக்க எமது வாழ்த்துக்கள்... அத்துடன் பேச்சை நிறுத்திக்கொண்ட வேட்பாளர் அங்கிருந்து புறப்படுகிறார். வாக்காளர் யோசிக்க ஆரம்பிக்கிறார்
|
||||||||
Vote | ||||||||
by Rajeshkumar Jayaraman on 09 Aug 2014 0 Comments | ||||||||
Tags: Vakku Vote வாக்கு ஓட்டு | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|