கனடா அமைச்சரவையை அலங்கரிக்கும் முதல் தமிழ்ப்பெண்
கனடாவில் 338 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்துக்குக் கடந்த மாதம் 21-ந் தேதி நடந்த தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி 157 இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது. கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களுடன் எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பிடித்தது. தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து பிரதமர் ட்ரூடோ தனது புதிய மந்திரிசபையை நேற்று முன்தினம் அமைத்தார். இந்த மந்திரிசபையில் முதல் முறையாகத் தமிழ்நாட்டின் வேலூர் பகுதியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் என்ற பெண் எம்.பி.யாகி உள்ளார். இவர் அங்குள்ள ஆன்டாரியா மாகாணத்தில், ஓக்வில்லே தொகுதியில் இருந்து கனடா நாடாளுமன்றத்துக்கு லிபரல் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பொது சேவைகள் மற்றும் கொள்முதல் துறை மந்திரி ஆகி இருக்கிறார். இவர் கனடாவில் நோவா ஸ்காட்டியா மாகாணத்தில் கென்ட்வில்லே நகரில் 1967-ம் ஆண்டு பிறந்தார். முதுநிலை சட்டப்படிப்பு படித்து அங்குள்ள டொராண்டோ பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பேராசிரியையாகப் பணியாற்றியவர் ஆவார். இவரது தந்தை டாக்டர் சுந்தரம் விவேகானந்த் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் ஆவார். தாயார் டாக்டர் சரோஜ், மயக்க மருத்துவ நிபுணர் ஆவார். அனிதா ஆனந்த் மந்திரி ஆகி இருப்பது உலகமெங்கும் வாழும் தமிழ்ப்பெண்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
|