ஒரு வரியில் படக்கதை : சுமார் ஹீரோவை... ஹீரோயின் எப்படி சூப்பர் ஹீரோவாக ஆக்குகிறார் என்பதே படத்தின் ஒன்லைன்.
தனியார் வங்கி ஒன்றில் வேலை செய்து வருகிறார் நம்ம ஹீரோயின் ஆண்ட்ரியா(சுபிக்ஷா). அதே வங்கியில் ஜெய்யின் அப்பாவான அழகம் பெருமாளும் வேலை செய்து வருகிறார்.
ஒருநாள் ஜெய்(வினோத்), அப்பா அழகம் பெருமாள், அம்மா அனுபமா குமார் ஆகியோர் குடும்பத்தோடு ஷாப்பிங் மாலுக்கு செல்கிறார்கள். அங்கு ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற பாக்ஸரான ஆரூண் சௌத்ரியுடன் பிரச்சினை ஏற்படுகிறது.
இதில் ஜெய் மற்றும் அழகம் பெருமாளை ஆரூண் அடித்து விடுகிறார். இதனால் ஜெய் மற்றும் அழகம் பெருமாள் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். இந்த பாதிப்பு ஒருவரை ஒருவர் முகம் கொடுத்து பார்க்க முடியாத அளவிற்கு செல்கிறது.
இதனால் ஜெய் வீட்டில் இருந்து வெளியேறி, நண்பருடன் இருந்துகொண்டு வேலைக்குச் செல்கிறார்.
தனக்கு நேர்ந்த வேதனையான சம்பவத்தை அழகம் பெருமாள் தன்னுடன் வேலை பார்க்கும் ஆண்ட்ரியாவிடம் பகிர்ந்துகொள்கிறார். மேலும் என் மகன் ஜெய், ஆரூணை அடித்திருந்தால் நான் சந்தோஷப்பட்டிருப்பேன் என்று கூறுகிறார்.
இதைக் கேட்ட ஆண்ட்ரியா, ஒரு திட்டம் தீட்டுகிறார்.
ஒரு சப்வேயில் ஜெய்யை பார்க்கும் ஆண்ட்ரியா முதல் பார்வையில் ஐ லவ் யூ சொல்கிறார். இதை தொடர்ந்து அவர் யார்? எதற்காக இப்படி சொன்னார்? என்று ஒரு வாரம் தேடி அலைய, ஒரு வழியாக ஆண்ட்ரியாவே, ஜெய்யை தேடி வருகிறார்.
அப்போது தான் ஜெய் தண்ணி அடித்து கொண்டு, ஆண்ட்ரியாவிடம் ஒரு யதார்த்தமான சந்திப்பில் அட்டாகசம் செய்கிறார். இதை ஆண்டிரியா, ஜெய்யிடம் கூற இந்த விஷயம் தெரிந்து அசட்டுத்தனமாக வழிந்து ஆண்ட்ரியாவை காதலிக்க ஆரம்பிக்கிறார் ஜெய்.
பின்னர் ஜெய் தன் காதலை கூறுகிறார். ஆனால், ஆண்ட்ரியாவோ நான் உன்னை காதலிக்க வேண்டும் என்றால், ஒருவனை அடிக்கணும் என்று கூறி மாலில் அசிங்கப்பட்ட பாக்ஸர் ஆரூணை காண்பிக்கிறார். ஜெய்யும் ஆரூணை எதிர்க்கொள்ள தயாராகிறார்.
இறுதியாக ஜெய் பாக்ஸர் ஆரூணை அடித்தாரா... ஜெய் - ஆண்ட்ரியாவின் காதல் என்ன ஆனது? என்பதே வலியவனின் மீதி கதை.
முதல் பாதியில் அப்பாவி இளைஞராக வரும் ஜெய்... பிற்பாதியில், சிக்ஸ் பேக் வைத்து சீறுகிறார். கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் நன்றாகவே நடித்திருக்கிறார்.
குறிப்பாக தண்ணி அடித்து விட்டு ஆண்ட்ரியாவுடன் செய்யும் ரகளைகள் செம..
படத்தின் ஆரம்பத்தில் காதலை சொல்லிவிட்டு, பின் காதலை மறுப்பதும், பின் காதலை ஏற்றுக் கொள்ள கண்டிஷன் போடுவதும் என சிறப்பாகவே நடித்திருக்கிறார் ஆண்ட்ரியா.
ஜெய்யின் தந்தையும், ஆண்ட்ரியாவின் சக ஊழியராகவும் நடித்திருக்கிறார் அழகம் பெருமாள். ஒரு நடுத்தர தந்தையின் வலியை மிக நன்றாக உணர்ந்து நடித்திருக்கிறார். இவரது மனைவியும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.
டி. இமான் இசையில் ஆஹா காதல் வந்து… பாடலை தவிர மற்ற பாடல்கள் எல்லாம் கேட்கும் ரகம் தான்.
மொத்தத்தில் வலியவன் கிளைமாக்சில் மட்டும்..
|