LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 273 - துறவறவியல்

Next Kural >

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய தவக்கோலம், புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை பசு மேய்ந்தாற் போன்றது.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
வலி இல் நிலைமையான் வல் உருவம்- மனத்தைத் தன் வழிப்படுத்தும் வலி இல்லாத இயல்பினை உடையான் வலியுடையார் வேடத்தைக் கொண்டு தான் அதன்வழிப்படுதல்; பெற்றம் புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று - பசு 'காவலர் கடியாமல்' புலியின் தோலைப் போர்த்துப் பைங்கூழை மேய்ந்தாற் போலும். (இல்பொருள் உவமை. 'வலிஇல் நிலைமையான்' என்ற அடையானும், மேய்ந்தற்று என்னும் தொழில் உவமையானும் வல் உருவத்தோடு மனவழிப்படுதல் என்பது பெற்றாம். காவலர் கடியாமை 'புலி புல் தின்னாது' என்பதனாலும் அச்சத்தானும் ஆம். ஆகவே, வல்உருவங் கோடற்குப் பயன் அன்ன காரணங்களான் உலகத்தார் அயிராமை ஆயிற்று. இவ்வாறு தனக்குரிய இல்லாளையும் துறந்து வலியும் இன்றிப் பிறர் அயிராத வல்உருவமுங் கொண்டு நின்றவன் மனவழிப்படுதலாவது, தன் மனம் ஓடிய வழியே ஓடிமறைந்து பிறர்க்கு உரிய மகளிரை விழைதலாம். அவ்வாறாதல், பெற்றம் தனக்கு உரிய புல்லைவிட்டுப் பிறர்க்குரிய பைங்கூழை மேய்ந்தாற்போலும் என்ற உவமையான் அறிக.)
மணக்குடவர் உரை:
வலியில்லாத நிலைமையை யுடையவன் வலிதாகிய தவவுருவங் கோடல், பெற்றமானது பிறர் பயப்படும்படி புலியினது தோலைப் போர்த்துப் பைங்கூழ் மேய்ந்த தன்மைத்து.
தேவநேயப் பாவாணர் உரை:
வலி இல் நிலைமையான் வல் உருவம்-மனத்தை யடக்கும் வலிமையில்லாத இயல்பினன் வலிமை மிக்க துறவியரின் தவக் கோலத்தைப் பூண்டு கூடாவொழுக்கம் ஒழுகுதல்; பெற்றம் புலியின தோல் போர்த்து மேய்ந்த அற்று-ஆவு கொல்லைக் காவலர் துரத்தா வண்ணம் புலியின் தோலைப் போர்த்துப் பயிரை மேய்ந்தாற் போலும். அதிகாரத்தாலும் உவமையாலும் கூடாவொழுக்கம் என்பது வருவித்துரைக்கப்பட்டது. ஆவையுடையார் அதற்குப் புலியின்தோலைப் போர்த்துப் பிறர் கொல்லையில் மேய விடுதலுங் கூடுமாதலின், இவ்வுவமை இல்பொருளுவமை யாகாது. புலி பசித்தாலும் புல் தின்னாது. என்னுங் கருத்தினாலும், புலியடிக்கு முன் கிலியடிக்கும். ஆதலாலும், புனங்காப்போர் புலியை அண்டுவதில்லை. அங்ஙனமே, தவத்தோர் தவறு செய்யார் என்னும் நம்பிக்கையினாலும், தவத் தோரை அணுகின் சாவித்து விடுவர் என்னும் அச்சத்தாலும், மக்கள் தவக்கோலத்தாரிடம் நெருங்குவதில்லை. புலித்தோற் போர்த்த பெற்றம் பிறர் புலங்களில் மறைவாக மேய்வது போல, கூடாவொழுக்கத்தானும் பிறர்க்குரிய பெண்டிரொடு கூடிக் களவாகவும் கள்ளத்தனமாகவும் இன்பம் நுகர்வான் என்பது பெறப்பட்டது.
கலைஞர் உரை:
மனத்தை அடக்க முடியாதவர் துறவுக்கோலம் பூணுவது, பசு ஒன்று புலித் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை மேய்வது போன்றதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
கெட்டவன் நல்லவன் போல நடிப்பது, பசு புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு மேய்ந்தது போலாகும்.
Translation
As if a steer should graze wrapped round with tiger's skin, Is show of virtuous might when weakness lurks within.
Explanation
The assumed appearance of power, by a man who has no power (to restrain his senses and perform austerity), is like a cow feeding on grass covered with a tiger's skin.
Transliteration
Valiyil Nilaimaiyaan Valluruvam Petram Puliyindhol Porththumeyn Thatru

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >