ஷங்கர் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள ஐ திரைப்படம் வரும் தீபாவளி அன்று ரிலீசாகும் என சொல்லப்பட்டு வரும் நிலையில் கடந்த சில நாட்களாக அந்தப் படம் தள்ளிப் போகவும் வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. நவம்பர் மாதம் 'உத்தம வில்லன்' படம், டிசம்பர் மாதம் 'லிங்கா' படம் வெளிவர உள்ள சூழ்நிலையில் 'ஐ' படத்தின் வெளியீடு திட்டமிட்டபடி தீபாவளி தினத்தன்றுதான் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஐ திரைப்படம் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பல பல இந்திய மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட உள்ளது.
கேரளாவைப் பொறுத்தவரையில் 'ஐ' படம் தமிழிலேயே அதிக இடங்களில் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. விக்ரம், எமி ஜாக்சன் நாயகன் நாயகியாக நடித்திருந்தாலும் மலையாள முன்னணி நடிகரான சுரேஷ் கோபியும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் அவருக்கிருக்கும் ரசிகர்களாலும் இந்தப் படம் அதிக வரவேற்பைப் பெறலாம் என்கிறார்கள்.
ஏற்கெனவே, கேரளாவில், விக்ரமுக்கென தனி ரசிகர்கள் இருந்து வரும் நிலையில், ஐ படத்தின் வெளியீடு நேரடி மலையாளப் படங்களின் ரிலீசையும், வசூலையும் பாதிக்கும். இந்நிலையில், மம்முட்டி நடித்துள்ள 'வர்ஷம்' என்ற படத்தை தீபாவளி அன்று வெளியிட முடிவு செய்திருந்தார்களாம் படக்குழுவினர். ஆனால், 'ஐ' படத்தை வெளியிட பெரும்பாலான திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதால் 'வர்ஷம்' படத்திற்கு எதிர்பார்த்த திரையரங்குகள் கிடைக்கவில்லையாம். அதனால், அந்தப் படத்தின் ரிலீசை ஒரு வாரம் வரை தள்ளி வைக்க முடிவு செய்துள்ளார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
|