திங்கள் முடிபொறுத்த பொன்மலை அருவி கருமணி கொழித்த தோற்றம் போல இருகவுள் கவிழ்த்த மதநதி உவட்டின் வண்டினம் புரளும் வயங்கு புகர்முகத்த செங்கதிர்த் திரள்எழு கருங்கடல் போல (5)
முக்கண்மேல் பொங்கும் வெள்ளம் எறிகடத்த பெருமலைச் சென்னியில் சிறுமதி கிடந்தென கண்அருள் நிறைந்த கலின்பெரும் எயிற்ற ஆறிரண்டு அருக்கர் அவிர்கதிர்க் கனலும் வெள்ளை மதிமுடித்த செஞ்சடை ஒருத்தன் (10)
உலகுயிர் ஆட ஆடுறும் அனலமும் தென்கீழ்த் திசையோன் தெறுதரு தீயும் ஊழித்தீப் படர்ந்து உடற்றுபு சிகையும் பாசக் கரகம் விதியுடை முக்கோல் முறிக்கலைச் சுருக்குக் கரம்பெறு முனிவர் (15)
விழிபடும் எரியும் சாபவாய் நெருப்பும் நிலைவிட்டுப் படராது காணியில் நிலைக்கச் சிறுகாற்று உழலும் அசைகுழைச் செவிய ஆம்பல் முகஅரக்கன் கிளையொடு மறியப் பெருங்காற்று விடுத்த நெடும்புழைக் கரத்த (20) கருமிடற்றுக் கடவுளை செங்கனி வேண்டி இடம் கொள் ஞாலத்து வலம்கொளும் பதத்த குண்டுநீர் உடுத்த நெடும்பார் எண்ணமும் எண்ணா இலக்கமொடு நண்ணிடு துயரமும் அளந்துகொடு முடித்தல் நின்கடன் ஆதலின் (25)
வரிவுடல் சூழக் குடம்பைநூல் தெற்றிய போக்குவழி படையாது உள்உயிர் விடுத்தலின் அறிவு புறம்போய உலண்டது போல கடல்திரை சிறுக மலக்குதுயர் காட்டும் உடல்எனும் வாயில் சிறைநடுவு புக்கு (30)
போகாது அணங்குறும் வெள்ளறி வேமும் ஆரணம் போற்றும்நின் காலுற வணங்குதும் கால்முகம் ஏற்ற துளைகொள் வாய்க்கறங்கும் விசைத்த நடைபோகும் சகடக் காலும் நீட்டிவலி தள்ளிய நெடுங்கயிற் றூசலும் (35)
அலமரு காலும் அலகைத் தேரும் குறைதரு பிறவியின் நிறைதரு கலக்கமும் என்மனத் தெழுந்த புன்மொழித் தொடையும் அருள்பொழி கடைக்கண் தாக்கி தெருளுற ஐய! முடிப்பைஇன் றெனவே. (40)
|