LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 546 - அரசியல்

Next Kural >

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று, அரசனுடைய செங்கோலே ஆகும், அச் செங்கோலும் கோணாதிருக்குமாயின்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
மன்னவன் வென்றி தருவது வேல் அன்று கோல் - மன்னவனுக்குப் போரின்கண் வென்றியைக் கொடுப்பது அவன் எறியும் வேல் அன்று, கோல், அதூஉம் கோடாது எனின் - அஃதும் அப்பெற்றித்தாவது தான் கோடாதாயின். (கோல் செவ்விதாயவழியே 'வேல் வாய்ப்பது என்பார், 'வேல் அன்று' என்றார். 'மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்' (புறநா.55) என்றார் பிறரும். 'கோடான்' என்பது பாடம் ஆயின், கருவியின் தொழில் வினைமுதல்மேல் நின்றதாக உரைக்க)
மணக்குடவர் உரை:
அரசனுக்கு வெற்றி தருவது அவன் கையிலுள்ள வேலன்று, முறை செய்தல்; அவன் அதனைக் கோடச் செய்யானாயின். இது செங்கோன்மை செய்ய வெற்றியுண்டாமென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
மன்னவன் வென்றி தருவது வேல் அன்று கோல் - அரசனுக்குப் போரின்கண் வெற்றியைக் கொடுப்பது வேற்படையன்று , அவன் அரசாட்சியே ; அதுவும் கோடாது எனின் - அவ்வரசாட்சியும் அங்ஙனஞ் செய்வது அறநெறிதவறாதிருந்த பொழுதே. "அறநெறி முதற்றே அரசின் கொற்றம்" என்றார் மதுரை மருதனிளநாகனார் ( புறம் . 55) . வெற்றிதருவது வேலன்று கோல் என்னும் எதுகை நயமும் , எறியும் வேலன்று ஏந்தும் கோலே யென்னும்முரண்நயமும் , கவனிக்கத்தக்கன . அதூஉம் இன்னிசை யளபெடை . மணக்குடவர் 'கோடா னெனின்' என்று பாடங்கொள்வர் . அப்பாடத்திற்கு , கருவியின் வினை சினைவினை போல முதல் வினைமேல் நின்றதாகக் கொள்க . 'கோல் அதூஉம்' என்பது போன்றே , 'இல்வாழ்க்கை அஃதும்' ( 46) என்னும் தொடரும் அமைந்திருத்தலை , ஒப்புநோக்கி யுணர்க.
கலைஞர் உரை:
ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்.
சாலமன் பாப்பையா உரை:
ஆட்சியாளருக்கு வெற்றி தருவது ஆயுதம் அன்று; அவரின் நேரிய ஆட்சியே; அதுவும் தவறான ஆட்சியாக இல்லாதிருக்க வேண்டும்.
Translation
Not lance gives kings the victory, But sceptre swayed with equity.
Explanation
It is not the javelin that gives victory, but the king's sceptre, if it do no injustice.
Transliteration
Velandru Vendri Tharuvadhu Mannavan Koladhooung Kotaa Thenin

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >