நடிகர் நடிகைகள்
விக்ரம்பிரபு - முருகன்
ஸ்ரீதிவ்யா யமுனா
சூரி - போலீஸ் பாண்டி
ஜான்விஜய் - வரதன்
ஒளிப்பதிவு - சூரஜ் நல்லுசாமி.
பாடல்கள் - வைரமுத்து, யுகபாரதி
இசை - D.இமான்
கதை, திரைக்கதை, இயக்கம் - எஸ்.எழில்.
தயாரிப்பு - அன்புசெழியன்
விக்ரம் பிரபுவும் சூரியும் நண்பர்கள். வீட்டோடு மாப்பிளையாக இருக்கும் சூரிக்கு, அவரது மனைவி வீட்டில் கொஞ்சம் கூட மரியாதையே இல்லை. இதனால், கடன் வாங்கியாவது சொந்த தொழில் தொடங்கி, சொந்தக் காலில் நின்று தனது சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்ள முடிவெடுக்கிறார்.
இதற்காக வில்லன் ஜான் விஜய்யிடம் ரூ.15 லட்சம் பணத்தை வட்டிக்கு வாங்கி, ரியல் எஸ்டேட் புரோக்கர் வையாபுரி மூலமாக ஒரு நிலத்தை வாங்கி அதை பிளாட் போட்டு விற்பனை செய்ய திட்டம் தீட்டுகிறார். இதற்கு நண்பர் விக்ரம் பிரபுவும் உதவியாக இருக்கிறார்.
ஒருநாள் இவர்களுடைய நிலத்தை பெரிய தொழிலதிபரான மதன்பாப் வாங்க வருகிறார். அவரிடம், பேச்சுவார்த்தை எல்லாம் முடித்து, அக்ரிமெண்ட் போடும் சமயத்தில், அந்த நிலத்திற்குள் சிலர் பிணத்தை கொண்டுவந்து அடக்கம் செய்கின்றனர். அப்போதுதான் சூரிக்கும், விக்ரம் பிரபுவுக்கும் தெரிகிறது அது ஒரு சுடுகாடு என்று. இதனால், மதன்பாப் அந்த நிலத்தை வாங்காமல் திரும்பி சென்றுவிடுகிறார்.
ரியல் எஸ்டேட் புரோக்கர் வையாபுரியால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்து சோகமடையும் விக்ரம் பிரபுவும், சூரியும் நண்பர்களுடன் சேர்ந்து குடிக்கிறார்கள். மது மயக்கத்தில் மயங்கி கிடக்கையில், வில்லன் ஜான் விஜய்யின் ஆட்கள் விக்ரம் பிரபுவையும், சூரியையும் தூக்கிக் கொண்டு அவர்கள் இடத்துக்கு செல்கிறார்கள்.
அங்கு வட்டிக்கு பணத்தை வாங்கி வாங்கிவிட்டு, திருப்பி செலுத்த முடியாதவர்களை அடிமையாக நடத்தி வருகிறார் வில்லன் ஜான் விஜய். அதேபோல், விக்ரம் பிரபுவையும், சூரியையும் அடிமைபோல் நடித்த முடிவெடுக்கிறார் ஜான் விஜய். இந்நிலையில், ஜான் விஜய்யை கொல்ல ஒரு மர்மக் கும்பல் வருகிறது. அவர்களிடமிருந்து ஜான் விஜய்யை விக்ரம் பிரபு காப்பாற்றுகிறார்.
இதனால், விக்ரம் பிரபு மீது ஜான் விஜய்யுக்கு நல்ல மரியாதை வருகிறது. இதையடுத்து விக்ரம் பிரபுவுக்கு மட்டும் அடிமைகளை மேற்பார்வையிடும் பணியை கொடுக்கிறார் ஜான் விஜய். ஜான் விஜய் இடத்தில், நண்பர்களுடன் கலாட்டா செய்து சுற்றி வரும் விக்ரம் பிரபு ஒருநாள் அங்கு நம்ம ஹீரோயின் ஸ்ரீதிவ்யாவை பார்க்கிறார். பார்த்ததும் காதலில் விழுகிறார். அப்போது சூரியிடம் அவள் யார் என்று கேட்க, சூரியும், அவளைப் பற்றி தெரிந்து கொள்ளமால் ஜான் விஜய்யின் தங்கை என்று சொல்லி வைக்கிறார்.
ஸ்ரீதிவ்யாவும் தன்னுடன் ஜாலியாக பழகும் விக்ரம் பிரபுவை காதலிக்க தொடங்குகிறாள். இருவரின் காதலும் மலர்ந்து காய் காய்க்கத் தொடங்குகிறது. இந்நிலையில், வில்லன் ஜான் விஜய்க்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.
சூரிக்கும், விக்ரம் பிரபுவுக்கும் திருமண ஏற்பாடுகளை கவனிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது. இவர்களும் ரொம்ப ஜாலியாக இந்த ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். திருமணத்தன்று மணப்பெண் கோலத்தில் ஸ்ரீதிவ்யா வருவதால் விக்ரம் பிரபு பார்த்து அதிர்ச்சியடைகிறார்.
அப்போதுதான் விக்ரம் பிரபுவுக்கு தெரிகிறது, ஜான் விஜய்க்கு ஸ்ரீ திவ்யா தங்கையும் அல்ல...முறைப்பெண்ணும் அல்ல.. இவளும் தன்னைப் போல் வட்டிக்கு பணம் வாங்கி பணத்தை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் ஜான் விஜய்யிடம் அடிமையாக மாட்டிக் கொண்டவள் என்று.
இறுதியில் வில்லன் ஜான் விஜய்க்கும், ஸ்ரீ திவ்யாவுக்கும் திருமணம் நடந்ததா... இல்லை... ஜான் விஜய்யிடம் இருந்து ஸ்ரீ திவ்யாவை காப்பாற்றி விக்ரம் பிரபு கரம் பிடித்தாரா என்பது தான் மீதி கதை.
முதன் முறையாக ஒரு காமெடி சப்ஜெட்டில் நடித்திருக்கும் விக்கிபிரபு, தனது கதாபாத்திரத்தின் மூலம் படத்தில் ஜொலித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால், ஹீரோயினை துரத்தி துரத்தி காதலிக்கும் காட்சிகளிலும் சரி, நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் காமெடி காட்சிகளிலும் பலே.
வழக்கம் போல் இந்த படத்திலும் சூரி தனது காமெடியால் கலக்கி இருக்கிறார். ஹீரோயினாக வரும் ஸ்ரீ திவ்யா, தனது அழகான நடிப்பினால் அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.
வில்லனாக வரும் ஜான் விஜய் ஆங்காங்கே வில்லத்தனத்தில் மிரட்டினாலும், காமெடியிலும் கலக்குகிறார்.
எழில் தன்னுடைய வழக்கமான காமெடி மசாலவையே இந்த படத்திலும் தூவியிருக்கிறார். இது அவருக்கு கச்சிதமாகவே வந்திருக்கிறது. கதைக்கு தகுந்தாற்போல் விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து அனைவரும் ரசிக்கும்படி செய்திருக்கிறார். டி.இமான் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் பரவாயில்லை...
மொத்தத்தில் வெள்ளைக்காரதுறை... குடும்பத்தோடு பார்க்கலாம்....
|