கும்பகோணம் நகரத்தின் மூத்த பிள்ளையாராக கரும்பாயிரம் பிள்ளையார் கருதப்படுவது சிறப்பு. ஆதிகாலத்தில் கும்பகோணம் வராஹபுரி என்ற பெயரால் அழைக்கப்பட்டது. ஒரு யுகாந்தரத்தில், துராத்மாவாகிய அசுரன் பூமியை பாதாள உலகத்துக்குக் கொண்டு சென்றுவிட்டான். ஜகத்கர்த்தாவாகிய ஸ்ரீவிஷ்ணு வராஹ வடிவெடுத்து விநாயகரை வேண்டிக்கொண்டே பூமாதேவியை மீட்டருளினார்.
அதனால் இந்தப் பிள்ளையார் வராஹப் பிள்ளையார் என்ற திருநாமத்துடன் அழைக்கப்பட்டார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு வரலாற்றுச் சம்பவம் காரணமாக, இந்த விநாயகர் கரும்பாயிரம் பிள்ளையார் என்று பொதுமக்களால் அழைக்கப்பட்டு வருகிறார்.கும்பகோணம் தல வரலாறுக்குக் காரணமாகவும் பிரதான சிவாலயமாகவும் விளங்கும் கும்பேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்கள், அருகில் அமைந்துள்ள இந்தப் பிள்ளையாரின் பெருமையறிந்து தரிசித்துச் செல்வது வழக்கமாக உள்ளது. |