நம் தேசத்திற்கு பரத கண்டம் என்றும், பாரததேசம் என்றும் பெயருண்டு. இதற்கு காரணமாக இருந்தவர் பரதர். இந்த பரதருக்கான கோயில் இது என்பதே தனிச்சிறப்பு.இரிஞ்ஞாலக்குடா கோயில் மூலவருக்கு பரதர் என்னும் பெயரை விட கூடல்மாணிக்கம் என்ற பெயரே பிரபலமாக உள்ளது. நாட்டுப்புற இலக்கியம் மட்டுமில்லாமல் மற்ற மலையாள இலக்கியங்களிலும் இவரைப் பற்றிய குறிப்புகள் நிறைய உண்டு.
அதிர்ஷ்டவசமாக, ஒருநாள் மூலவர் பரதரின் முன் நெற்றியில் இருந்து பேரொளி ஒன்று கிளம்பியது. அது எங்கிருந்து வருகிறது என்று பலரும் தேடினர். ஒருவராலும் முடியவில்லை. இதையடுத்து ஒரு பக்தர், காயங்குளம் ராஜாவுக்குச் சொந்தமான மாணிக்கக் கல் ஒன்றை கோயிலுக்கு கொண்டு வந்தார். சிலையில் இருந்து வரும் ஒளியோடு, மாணிக்கக்கல்லின் ஒளியை ஒப்பிடும் நோக்கத்தில் மூலவர் அருகில் சென்றார்.
அப்போது, ஒரு அதிசயம் நிகழ்ந்தது. அவர் கையில் இருந்த மாணிக்க கல் அப்படியே பரதரின் நெற்றிக்குள் மறைந்துவிட்டது. அன்றுமுதல், பரதருக்கு மாணிக்கம் என்ற பெயர் ஏற்பட்டது. கோயில் உள்ள பகுதி கூடல் என்பதால் கூடல் மாணிக்கம் என்ற பெயர் நிலைத்துவிட்டது. |