இங்கு சுவாமி, கிருஷ்ணராக பால பருவத்தில் இருந்தாலும், பூதனையிடம் பால் அருந்தியதால் பூதாகரமாக பெரிய உருவத்துடன் காட்சியளிக்கிறார். இடது காலை மடித்து, வலது காலை குத்திட்டு அமர்ந்திருக்கிறார். வலது கையில் சங்கு மட்டும் உள்ளது. இடது கையை பக்தர்களுக்கு அருள் தரும் அபய முத்திரையாக வைத்திருப்பது சிறப்பு.வைகுண்ட ஏகாதசியன்று சுவாமி கருட வாகனத்தில் எழுந்தருளுவார்.
புரட்டாசி கடைசி சனிக்கிழமையன்று ஒரு மூடை அரிசியில் சாப்பாடு சமைத்து, சன்னதி முன் கொட்டி சுவாமிக்கு படைக்கின்றனர். பின், அதை பக்தர்களுக்கு பிரசாதமாகத் தருவர். கிருஷ்ணர் பெரிய வடிவில் இருப்பதால் இவ்வாறு செய்கிறார்கள். கிருஷ்ண ஜெயந்தியன்று சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம் மட்டும் நடக்கும்.
ஏகாதசி, திருவோண நட்சத்திரம் மற்றும் பவுர்ணமி நாட்களில் சுவாமிக்கு விசேஷ திருமஞ்சனம் நடக்கும். எதிரி பயம் நீங்க, செயல்களில் வெற்றி கிடைக்க இங்குள்ள சக்கரத்தாழ்வாருக்கு புதன் கிழமைகளில் துளசி மாலை அணிவித்து, சர்க்கரைப்பொங்கல் நைவேத்யம் செய்து வழிபடுகின்றனர். |