இங்குள்ள மூலவர் மோகினி அலங்காரத்தில் காட்சி தருவது தனி சிறப்பு. சென்னகேசவரின் நெற்றியில் ஸ்ரீசூர்ணம் செந்நிறத்தில் காட்சி தருகிறது. நின்றகோலத்தில் பெருமாள் சேவை சாதிக்கிறார். முகத்தில் பெண்மையின் எழிலும், கண்களில் அருளும் இழையோடுகிறது. மூக்குத்தி அணிந்திருக்கிறார். பாதத்தில் சதங்கையும்,கொலுசும் அழகு செய்கின்றன.
சங்கு,சக்கரம் இரண்டையும் மேல் இரு கைகள் தாங்கி நிற்கின்றன. வலக்கரத்தில் திருமகள்போல தாமரை மலரைத் தாங்குகிறார். இடக்கரம் கதாயுதத்தை தாங்கி நிற்கிறது. பெரிய பீடத்தின் மேல் 6 அடி உயரத்தில் இப்பெருமாளின் திருவுருவம் விளங்குகிறது. கேசவன் என்றால் தடைகளை நீக்குபவன் என்று பொருள். இக்கோயில் கோபுர கலசத்தைக் காண்பதால் சாபவிமோசனமும், சென்ன கேசவரின் பாதத்தைத் தரிசிப்பதால் பாவ விமோசனமும் உண்டாகும் என்பதை சிகர தரிசனம் சாபவிமோசனம், பாததரிசனம் பாவவிமோசனம் என்று குறிப்பிடுகின்றனர்.
கோபுரத்தைத் தாண்டிச் செல்லும்போது, கருடாழ்வார் சிறகை விரித்தபடி மூலவர் சந்நிதியின் முன் திறந்த வெளியில் நின்றகோலத்தில் சேவை சாதிக்கிறார். |