தன்வந்திரி பகவானுக்கு தனி கோயில் அமைந்திருப்பதே சிறப்பு. இங்கு சஞ்சீவி ஆஞ்சநேயர், முனீஸ்வரர், மேதா தட்சிணாமூர்த்தி, நவ கன்னிகைகள், அத்ரி
பாதம், விநாயகர், மஹிஷாசுரமர்த்தினி, கார்த்தவீர்யார்ஜுனர், சுதர்சன ஆழ்வார், ஒரே கல்லில் அமைந்த ராகு - கேது, வாணி சரஸ்வதி, ஸ்வர்ண ஆகர்ஷண
பைரவர், அஷ்ட நாக கருடன், வேதாந்த தேசிகருடன் லட்சுமி ஹயக்ரீவர், ஸ்வர்ண அன்னபூரணி, காயத்ரி தேவி, வள்ளலார், காஞ்சி மகா ஸ்வாமிகள், ஷீர்டி
பாபா, மகா அவதார் பாபா, ராகவேந்திரர், லிங்கத் திருமேனியில் எழுந்தருளும் 468 சித்தர்கள், கார்த்திகை குமரன், நவநீதகிருஷ்ணன், மரகதாம்பிகை சமேத
மரகத லிங்கேஸ்வரர், வாசவி கன்னிகா பரமேஸ்வரி, குழந்தையானந்த மகா ஸ்வாமி, பட்டாபிஷேக ராமர், வாஸ்து பகவான் - இத்துடன் மணம் கமழும் மூலிகை
வனம், கவலைகள் போக்கும் காலச் சக்கரம் (27 நட்சத்திரங்களுக்கும், 12 ராசிகளுக்கும், 9 கிரகங்களுக்கும் தனித் தனி விருட்சம் உள்ளது). இருபத்திநான்கு
நேரமும் புகைந்து கொண்டிருக்கும் யாக சாலை, சுவாஹா பீடம், பஞ்ச தீபம் (அகண்ட தீபம்), பித்ரு தோஷம் நீக்கும் பாதம், திருவருள் அளிக்கும் குரு
பிரார்த்தனை போன்ற சன்னதிகளும் அமையப் பெற்றுள்ளன.
ரிக், யஜுர், சாமம், அதர்வணம். இவற்றோடு ஐந்தாம் வேதம் ஒன்றும் உண்டு. அதுதான் ஆயுர்வேதம். எண்ணற்ற மகரிஷிகள், நம்மிடம் இருக்கும் மருத்துவ முறைகளை ஆராய்ந்து ஏராளமான மருத்துவ நூல்களை எழுதி இருக்கிறார்கள். இதன் தொகுப்பே ஆயுர்வேதம். அதாவது, மூலிகைகளை வைத்தே பல வியாதிகளைக் குணப்படுத்தும் முறைதான் இது. மனிதர்களின் ஆரோக்கியம் சிறந்து விளங்குவதற்கான பல நல்ல பயனுள்ள வழிமுறைகள் இந்த ஆயுர்வேதத்தில் உள்ளன.
யுத்த சாஸ்திரத்தை ரண வைத்தியம் எனவும் அழைப்பதுண்டு. அதாவது, போரில் காயம் பட்டவர்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் உடலில் உள்ள காயங்களை ஆற்றுவது சஸ்திர சாஸ்திரம் எனப்படும். தனுஷ் என்றால், யுத்தம், யுத்த சாஸ்திரம், சஸ்திர சாஸ்திரம் என்ற பொருட்களும் உண்டு. இந்த சாஸ்திரத்தை முழுமையாக அறிந்தவர் தன்வந்திரி பகவான். தனு என்ற வார்த்தைக்கு அம்பு, உடலைத் தைத்தல் என்கிற பொருள் உண்டு. எனவே, தன்வந்திரி என்கிற வார்த்தைக்கு அறுவை சிகிச்சை முறையில் சிறந்தவர் என்றும் கொள்ளலாம்.
பிரம்மன் நான்கு வேதங்களையும் படைத்து, அதன் சாரமாகிய ஆயுர்வேதத்தையும் படைத்தான். இந்த ஆயுர்வேதம் நன்றாகத் தழைத்தோங்கி, பலரையும் அடைய வேண்டும் என்பதற்காக, முதலில் சூரிய பகவானுக்கு உபதேசித்தார் பிரம்மன். சூரிய பகவானும் இதை நன்றாகக் கற்று உணர்ந்து, அதை எங்கும் பரவச் செய்யும் பணியை மேற்கொண்டார். |