கலைநுட்ப வேலைப்பாடுகள் மிக்க தூண்களை தட்டினால் பல்வேறு இசை ஒலிகள் எழுகிறது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பத்தில் சிங்கம், கீழே யானை என்று அதிசயிக்க வைக்கின்றன. இங்கு இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலில் சித்திரை மாதம் பவுர்ணமி தினத்தில் கோயில் கதவு ஓட்டை வழியாக வரும் சூரிய ஒளி இறைவன் மீது பட்டுக்கொண்டிருந்தது. ராவண வதம் முடிந்து ராமர் பட்டாபிஷேகம் செய்து கொண்ட புராதன சிறப்பு மிக்க கோயில் சேலம் அயோத்தியாபட்டணம் ராமர் கோயில்.
வட இந்தியா சென்று அயோத்தியில் உள்ள ராமரை வழிபட வேண்டும் என்று அவசியம் இல்லை. சேலம் அருகே உள்ள அயோத்தியாபட்டணம் ராமரை வழிபட்டாலே போதும். சகல புண்ணியங்களும் கிட்டும்.சீதையை மீட்க வானரப் படையுடன் இலங்கை சென்று ராவணனை கொன்ற ராமர் இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு காலடி வைத்தார். அயோத்திக்கு திரும்ப வேண்டும் என்றால் சைல மலை குன்றுகள் வழியாக தான் திரும்ப வேண்டும். ராமர், சீதை, லட்சுமணன், அனுமார், சுக்ரீவர், விபீஷணர் அனைவரும் சைல மலை குன்று பகுதியை வந்தடைந்த போது லேசாக இருட்ட தொடங்கியது.
களைப்பாறி விட்டு செல்லலாம் என்று நனைத்த போது, சிறிய அளவிலான கோயில் ஒன்று தென்பட்டது.இங்கு ராமர், சீதை, லட்சுமணன் உட்பட அனைவரும் அன்றிரவு தங்கினர். விடிந்து எழுந்த போது பட்டாபிஷேகத்திற்கான நாள், நட்சத்திரம் நெருங்கி விட்டது. நேரம் தவறினால் ராஜ குற்றமாகிவிடும் என்று எண்ணிய ராமர் இந்த கோயிலிலேயே பட்டாபிஷேகம் செய்து கொண்டதாகவும், பின்பு அயோத்தி சென்று முறைப்படி பட்டாபிஷேகம் முடித்தார் என்றும் சொல்வதுண்டு. |