பெருமாள் கோயில் வாசலில் காவல் நிற்கும் ஜெயன், விஜயன் ஆகியோர் சன்னதிக்குள் பெருமாளின் திவ்யதரிசனத்தைக் காண்பது கோயிலின் சிறப்பம்சம். கருவறையில் கஸ்தூரி ரங்கநாதர் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் பள்ளிகொண்ட கோலத்தில், வலது கையில் தண்டத்தை பிடித்தபடி இருக்கிறார். தலைக்கு மேலே ஆதிசேஷன், ஐந்து தலைகளுடன் குடையாக இருக்கிறார்.
சுவாமிக்கு தைலக்காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது. ஆனியில் தைலக்காப்பின்போது 48 நாட்கள் சுவாமியின் முகம் மற்றும் பாத தரிசனத்தை மட்டுமே காண முடியும். சில ஆண்டுகளுக்கு முன்புவரை கர்ப்பிணிப் பெண்கள், சுகப்பிரசவம் ஆவதற்காக சுவாமிக்கு கஸ்தூரி எனும் மருந்து படைத்து வழிபடும் வழக்கம் இருந்தது. இதன் காரணமாக சுவாமிக்கு, "கஸ்தூரி ரங்கநாதர்' என்ற பெயர் ஏற்பட்டது.
இப்போது இந்த வழக்கம் நின்றுவிட்டது.சுவாமி சன்னதிக்கு பின்புறத்தில் கமலவல்லித்தாயார், தனிச்சன்னதியில் கிழக்கு பார்த்து அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். பங்குனி உத்திரத்தன்று சுவாமி, தாயார் சன்னதிக்கு எழுந்தருளி திருக்கல்யாணம் செய்து கொள்கிறார். அன்று ஒருநாள் மட்டும் தாயாருடன், சுவாமியை தரிசனம் செய்ய முடியும். |