முன்மண்டபத்தில் ருக்மணி, சத்யபாமாவுடன் கோபாலன் தனி சன்னதியில் அருளுகிறார். ராமர் சிலை வைக்கப்படும் முன்பு இவரே மூலஸ் தானத்தில் இருந்தார். பிரகாரத்தில் ஹயக்ரீவர், விஷ்வக்ஷேனர், ஆண்டாள், ஆழ்வார்கள் உள்ளனர். சரயு தீர்த்தம் கோயிலுக்கு வெளியில் இருக்கிறது. இவ்வூர் "தெட்சிண அயோத்தி' என்றும் அழைக்கப்படுகிறது.மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் புஷ்பக விமானம் எனப்படுகிறது.
மூலஸ்தானத்தில் ராமபிரான், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயருடன் காட்சி தருகிறார். மார்பில் மகாலட்சுமி பதக்கம் மற்றும் சாளக்கிராம மாலை அணிந்திருக்கிறார். ராமரின் பிறந்த நட்சத்திரமான புனர்பூசத்தின் போது, திருமஞ்சனம் செய்து வழிபடுகிறார்கள். அன்று மாலையில் இவர் சீதையுடன் புறப்பாடாகிறார்.
ராமநவமியை ஒட்டி 10 நாட்கள் பிரம்மோற்ஸவம் நடக்கிறது. ஏழாம் நாள் திருக்கல்யாணம், 9ம் நாள் தேர்த்திருவிழா நடக்கிறது. ஐந்தாம் நாளில், இவர் ஆண்டாள் திருக்கோலத்தில் எழுந்தருளுவது விசேஷம். அட்சய திரிதியை அன்று ராமர் கருடசேவை சாதிக்கிறார். |