இத்தல பெருமாள், தனது பத்தினியரை பிரியாத மூர்த்தியாக இருப்பதால் இவருக்கு, "நித்ய கல்யாண பெருமாள்' என்றும் பெயருண்டு. நவக்கிரக தோஷங்களை நீக்கும் மூர்த்தியாக இங்கு சுவாமி அருளுகிறார். சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமைகளில் சுவாமிக்கு எள்சாதம் நைவேத்யம் செய்து வணங்குகின்றனர். மாணவர்கள் கல்வியில் சிறப்பிடம் பெற,புதன் கிழமைகளில் பாசிப்பயறு படைத்து வழிபடுகிறார்கள்.
வைகாசி பிரம்மோற்ஸவத்தின் ஐந்தாம் நாளில் "ஐந்து கருட சேவை' நடக்கும். அப்போது வேணுகோபாலர் மற்றும் இதே ஊரிலுள்ள நவநீதகிருஷ்ணர், லட்சுமிநாராயணர், சுந்தர்ராஜர், கோயில்களில் இருந்து சுவாமிகள் இங்கு எழுந்தருளி கருடசேவை காண்பர். கிருஷ்ண ஜெயந்தியன்று சுவாமிக்கு கண்திறப்பு மற்றும் சங்குப்பால் தரும் வைபவம் நடக்கும். அன்று ஒரு தேங்காயை சுவாமியின் பாதத்தில் வைத்து, அதன் மூன்று கண்களையும் திறப்பர்.
அதன்பின் சிறிய சங்கில், பால் எடுத்து அதை உற்சவமூர்த்திக்கு புகட்டுவதுபோல பாவனை செய்வர். அன்று பக்தர்களுக்கு நெல் பிரசாதம் தரப்படும். கிருஷ்ணர் பிறந்ததும், உலகம் செழிப்பாக இருந்ததை நினைவுறுத்தும் வகையில் இவ்வாறு செய்கின்றனர். இந்த நெல்லில் இருந்து கிடைக்கும் அரிசியை, நாம் வாங்கும் அரிசியுடன் கலந்துவிட்டால், அன்னத்திற்கு எப்போதும் பஞ்சம் வராது என்பது நம்பிக்கை. |