இக்கோயிலில் கூடலழகர், அஷ்டாங்க விமானத்தின் கீழ் எழுந்தருளியிருக்கிறார். இந்த விமானம் ராமாயணம் மற்றும் கிருஷ்ணரின் லீலைகளை விளக்கும் சிற்பங்களுடன் மிகுந்த வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.தசரதரின் ஆட்சியிலிருந்து, ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்கனன் பிறப்பு, ராமர் திருமணம், அவரது வனவாசம், ராவணனால் சீதை கடத்தப் படுதல், அவரை ராமர் மீட்டு வந்து பட்டாபிஷேகம் செய்தல் என ராமாயண நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றையும் இங்கு தத்ரூபமாக சிலையாக வடித்துள்ளனர்.
பிரகாரம் சுற்றி வரும் வேளையில் சுவாமி சன்னதி முன் மண்டபம், அஷ்டாங்க விமானத்தில் இந்த சிற்பங்களைக் காணலாம். சிற்ப சிறப்பால் இந்த விமானத்திற்கு, "ராமாயண விமானம்' என்ற பெயரும் உண்டு. மன்னர் இங்கு கோயில் அமைத்தபோது, மூலஸ்தானத்தைச் சுற்றி விமானத்தின் கீழே ஒரு பிரகாரம் அமைத்தார். பக்தர்கள் இப்பிரகாரத்திலும் வலம் வரலாம். இது, புராதனமான கோயில்களில் மட்டுமே காணப்படும் அமைப்பாகும். |