முற்காலத்தில் இக்கோயில் சிவனுக்குரியதாக இருந்ததால், அவருக்குரிய வில்வம் இங்கு தலவிருட்சமாக இருக்கிறது. முன்மண்டபத்தில் பதினாறு கைகளுடன் சக்கரத்தாழ்வார் காட்சி தருகிறார். இவருக்கு பின்புறம் நான்கு கரங்களிலும் சக்கராயுதத்துடன் யோக நரசிம்மர் இருக்கிறார். இவருக்கு இருபுறமும் சிவன், பிரம்மா ஆகியோரும் இருக்கின்றனர். இவரது பீடத்தில் ஐந்து தலைகளுடன் ஆதிசேஷன் இருக்கிறார்.
இத்தகைய அமைப்பில் நரசிம்மரை காண்பது அபூர்வம்.நரசிம்மர், ஒரு மாலை வேளையில் உக்கிரத்துடன் இரணியனை சம்ஹாரம் செய்தார். எனவே, இவரை சாந்தப்படுத்தும் விதமாக தினமும் மாலையில் சுக்கு, வெல்லம், ஏலம், நீர், எலுமிச்சை சாறு சேர்ந்த கலவையை நைவேத்யமாக படைத்து, பிரசாதமாக தருகின்றனர். பக்தர்கள், சுவாதி நட்சத்திர நாட்களில் நரசிம்மருக்கு பானகம் படைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.
இத்தலத்திலுள்ள அஞ்சலி ஆஞ்சநேயர், தனது தலைக்கு மேலே மிகச்சிறிய லிங்கத்தை வைத்தபடி காட்சி தருகிறார். ஆஞ்சநேயரின் இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது. மூலஸ்தானத்தில் பெருமாள், மடியில் மகாலட்சுமியை வைத்தபடி அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். பெருமாள், புதன் கிரகத்திற்கும், தாயார் சுக்ரனுக்கும் அதிபதி ஆவர். |