லட்சுமி நாராயணர், வராகமூர்த்தி, கண்ணன் என மூன்று கோலங்களில் பெருமாள் இத்தலத்தில் அருள்புரிகிறார். ஆந்திராவில் வசித்த நாராயண தீர்த்தர் என்ற மகான், தீராத வயிற்று வலியால் பாதிக்கப்பட்டிருந்தார். நோய் தீர பெருமாள் தலங்களுக்கு யாத்திரை வந்தார். இப்பகுதிக்கு வந்தவர் ஓர்நாள் இரவில் நடுக்காவிரி என்ற இடத்திலிருந்த ஒரு விநாயகர் கோயிலில் தங்கினார்.
அன்றிரவில் அவரது கனவில் தோன்றிய முதியவர் ஒருவர், "நாராயணா! நாளை காலையில் நீ முதலில் காணும் உயிரைப் பின்தொடர்ந்து வா! உன் பிணி தீரும்' என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார். மறுநாள் காலையில் நாராயண தீர்த்தர் எழுந்தபோது, அவர் எதிரே ஒரு வெண் பன்றி வந்தது. அதைக்கண்டவர் தான் கனவில் கண்டபடி, பன்றியை பின்தொடர்ந்தார். அது, இக்கோயிலுக்குள் சென்று மறைந்தது.
வராக அவதாரம் எடுத்த பெருமாளே, தனக்கு வராகத்தின் வடிவில் வந்து அருள்புரிந்ததை அறிந்த மகான் சுவாமியை வணங்கினார். மகிழ்ச்சியில் சுவாமியைப் போற்றி கீர்த்தனை பாடினார். அப்போது, இங்கிருந்த லட்சுமி நாராயணர் அவருக்கு ருக்மிணி, பாமாவுடன் கிருஷ்ணராகக் காட்சி கொடுத்தார். பாமா அவரிடம், "பக்தா! உம் பரமாத்மா கோபிகையருடன் புரிந்த லீலைகளைப் பாடு!' என்றாள். மகிழ்ந்த நாராயண தீர்த்தர், அவ்வாறே பாடினார். "கிருஷ்ண லீலா தரங்கிணி' என்ற அற்புத பாசுரம் கிடைத்தது. சுவாமி வராகராக காட்சி தந்ததால் ஊருக்கு "வரகூர்' என்ற பெயர் ஏற்பட்டது. |