இங்குள்ள மூலவர் வலது கரத்தில் சங்கும், இடது கரத்தில் சக்கரமும் ஏந்தியிருப்பது சிறப்பு.ராமானுஜர் எழுப்பிய தொண்டனூர் நம்பி நாராயாணர் கோயிலில், சுமார் 18 அடி உயரத்தில், வலது கரத்தில் சங்கு இடது கரத்தில் சக்கரம் என மாறி, ஏந்தியுள்ளார் மூலவர். நரசிம்மர் கோயிலில், ஆதிசேஷன் உருவெடுத்த ராமானுஜரின் திருவிக்கிரகம் காட்சி தருகிறது. இந்தக் கோயிலுக்கு அருகில் அழகிய ஏரியையும் அமைத்தார், உடையவர்.
இன்றுவரை வற்றாத ஏரியாகத் திகழ்வதாகப் போற்றுகின்றனர், பக்தர்கள். இந்தியத் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிற்ப நுட்பங்கள் கொண்ட ஆலயத்தை, பார்த்துக்கொண்டே இருக்கலாம். கொள்ளை அழகு! ஹொய்சாளர் காலத்து கட்டுமானப் பாணியில், பேளூர், ஹளபேடு கோயில்கள் போலவே, இங்கும் அழகிய தூண்கள் காட்சி தருகின்றன. அருகில் உள்ள சிறு குன்று ஒன்றில் நரசிம்மர் கோயிலும், எதிரில் கோபாலகிருஷ்ணர் ஆலயமும் அமைந்துள்ளன. |