இத்தல பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தனது மாமாவான திருமாலுக்கு மரியாதை தரும் விதமாக விநாயகர் நின்ற கோலத்தில் இருப்பதும், கைகளில் சங்கு, சக்கரம் மற்றும் கதாயுதம் வைத்திருப்பதும் வித்தியாசமான அமைப்பு. இவரது பீடத்தில் கருடாழ்வார் மண்டியிட்டு அமர்ந்து வணங்கியபடி இருக்கிறார். மூலஸ்தானத்தில் வெங்கடேசப் பெருமாள் இருக்கிறார்.
இவர் திருப்பதி பெருமாளின் அமைப்பில் காட்சி தருவது விசேஷம். முன்மண்டபத்தில் கிருஷ்ணருக்கு சன்னதி இருக்கிறது. இவர், நர்த்தன கோலத்தில் காட்சி தருகிறார். இவர் ஆதியில் வழிபடப்பட்ட மூர்த்தி என்பதால், முதல் பூஜை இவருக்கே நடக்கிறது. "நவநீத கிருஷ்ணர்' உற்சவராக அருளுகிறார்.ஒவ்வொரு ரோகிணி நட்சத்திரத்தன்றும் இவர் தொட்டிலில் புறப்பாடாவது விசேஷம்.
இவருக்கு வெண்ணெய், அவல் பாயாசம், சுக்கு ஆகியவற்றை நைவேத்யமாக படைக்கின்றனர். அறிவாற்றல்மிக்க குழந்தை பிறக்க, துளசி மாலை அணிவித்து, அவல் பாயாசம் படைத்து வேண்டிக் கொள்கிறார்கள்.கிருஷ்ண ஜெயந்தியன்று மாலையில் கிருஷ்ணர் பிறக்கும் வைபவத்தை இத்தலத்தில் பாவனையாக நடத்துகின்றனர். மறுநாள் சுவாமி, தங்கதொட்டிலில் புறப்பாடாகி, உறியடி உற்ஸவம் காண்கிறார். |