மூலவர் மூலிகைகள் அடங்கிய சுதையால் செய்யப்பட்டவராக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். குலசேகர ஆழ்வார் முக்திபெற்ற தலம். சேரநாட்டு திடவிரத மன்னரின் மகனாக அவதரித்த ஆழ்வார்களில் ஒருவரான குலசேகரர், பெருமாள் குடிகொண்டிருந்த பல தேசங்களுக்கும் சென்று அவ்விடங்களில் பெருமாளை தரிசனம் செய்து அவரது அருளைப்பெற்று வந்தார்.
அவ்வாறு, பயணம் செய்த அவர் இத்தலத்திற்கு வந்தபோது அரங்கநாதனாக காட்சி தந்த வேதநாராயணனின் கோலத்தில் கண்ணுற்று மயங்கினார். இதனால். பிற தலங்களுக்கு செல்வதை மறந்த அவர் இத்தலத்திலேயே தங்கி நாராயணனின் பாதத்தில் முக்தி பெற்றார். குலசேகர ஆழ்வார் முக்தி பெற்ற இத்தலத்தில் விபீஷ்ணாழ்வாரும் வந்து சுவாமியைத் தரிசனம் செய்து சென்றுள்ளார். இவ்வாறு, ஆழ்வார்களால் வணங்கப்பெற்ற பெருமை வாய்ந்த தலம். |