சிறுவனுக்கு காட்சி கொடுத்தவர் என்பதால், உத்தமராயப்பெருமாள் சிறுவன் போலவே பால்ய மூர்த்தியாக காட்சியளிப்பது சிறப்பான அமைப்பு. உத்தமராயப்பெருமாள் எதிரே கருடாழ்வார் மட்டும் இருக்கிறார். மற்ற பரிவார மூர்த்திகள் கிடையாது. இங்குள்ள துவாரபாலகர்கள் சிலை விசேஷமானது. இவர்களது சிலை அரிதாக கிடைக்கும் சிவப்பு நிறமான ஒரு வகை கற்களால் செய்யப்பட்டதாகும்.
சுவாமி சன்னதிக்கு இருபுறமும் உள்ள பாறையில் புடைப்புச் சிற்பமாக நாகர் இருக்கிறார். நாகதோஷம் உள்ளவர்கள், தோஷ நிவர்த்திக்காக இதற்கு மஞ்சள் காப்பிட்டு வழிபடுகின்றனர். சன்னதிக்கு வலப்புறம் தியான குகை உள்ளது. இதன் முகப்பின் இருபுறமும் பெருமாளின் வாகனமான கருடாழ்வார் மற்றும் ஆஞ்சநேயர் உள்ளனர். பெருமாள், சிறுவனுக்கு இந்த குகையில்தான் காட்சி தந்ததாக தல வரலாறு சொல்கிறது.
சில குழந்தைகள் பிறந்ததில் இருந்தே பேசும் தன்மையற்ற ஊமைகளாக இருப்பர். இன்னும் சிலர் திக்குவாய் பிரச்னையுடனோ, சரியான உச்சரிப்பு இல்லாதவர்களாகவோ இருப்பர். இவர்கள் நன்கு பேசவும், ஊமைக் குழந்தைகளுக்கு பேச்சு வரவும் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கின்றனர். |