ஸ்ரீராமரின் இடது கையில் உள்ள தனுஸில் (வில்) நரசிம்மர் எழுந்தருளியிருப்பது மிகவும் அதிசயம். ராமரின் அருகிலேயே பெரிய திருவடி கருடாழ்வாரும், சிறிய திருவடி அனுமனும் அருள்பாலிப்பதும், நரசிம்மர் மடியில் உள்ள தாயார் நரசிம்மரை ஆலிங்கனம் செய்திருப்பதும் சிறப்பு. தன் அவதாரங்களை தானே பறைசாற்றிக் கொள்கிற திருமால், பரத்வாஜ முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க அங்கே ஸ்ரீராமராகவும் திருக்காட்சி தந்தார். நரசிம்ம மூர்த்தமாகவும் தரிசனம் தந்தார்! இதில் மெய்சிலிர்த்துப் போனார் பரத்வாஜ முனிவர்.
பரம்பொருள், முனிவருக்குத் தரிசனம் அளித்ததை அறிந்து, அங்கே ஆச்சார்யர்களும் அந்தணர்களும் ஓடோடி வந்தனர். அந்த நதியிலும் கரையிலும் வனத்திலும் மனதைப் பறிகொடுத்தவர்கள், அவர்களும் அங்கேயே தங்கி, திருமாலுக்கு பூஜை செய்யத் துவங்கினார்கள். அந்த இடத்தில் மெள்ள மெள்ள நல்லதொரு அதிர்வலைகள் பரவின. தினமும் காலையிலும் மாலையிலும் வேத கோஷங்கள் ஒலித்துக்கொண்டே இருந்தன. ஒருபக்கம் அந்தணர்கள் கூட்டமாக அமர்ந்து வேதங்களை முழங்க.. இன்னொரு பக்கத்தில், ஆசார்யபுருஷர்கள் யாக வேள்வியில் ஈடுபட்டனர்.
பாஹு நதிக்கரையில் யாகங்களும் வேத கோஷங்களும் நிறைந்திருந்ததால், அந்த இடத்துக்கு யக்ஞ வேதிகை என்று பெயர் ஏற்பட்டது. அந்த இடம், யாக மேடு என்று அழைக்கப்பட்டது. முனிவர்களும் அந்தணர்களும் ஆசார்ய புருஷர்களும் வழிபட்டு வேதம் சொல்கிற அந்த இடம் குறித்து, மன்னருக்குத் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த மன்னர், அங்கே ஆலயம் ஒன்றை உருவாக்க ஆணையிட்டார். தொண்டை நாட்டில் சிறந்து விளங்குகிற ஆலயங்கள் எத்தனையோ உண்டு என்றபோதிலும், இந்தக் கோயிலை மிக அழகாகவும் பிரமாண்டமாகவும் கட்டி, வழிபடத் துவங்கினார் மன்னர் என்கிறது ஸ்தல வரலாறு. |