திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
குற்றமானச் சொற்களை வாய் சோர்ந்தும் சொல்லாத உறுதி உடையவனே அரசன் சொல்லியனுப்பிய சொற்களை மற்ற வேந்தர்க்கு உரைக்கும் தகுதியுடையவன்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
விடு மாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் - தன்னரசன் சொல்லிவிட்ட வார்த்தையை வேற்றசர்க்குச் சென்று சொல்ல உரியான்; வடுமாற்றம் வாய்சோரா வன்கணவன் - தனக்கு வரும் ஏதத்திற் கஞ்சி அவனுக்குத் தாழ்வான வார்த்தையை வாய் சோர்ந்தும் சொல்லாத திண்மையை உடையான். (தாழ்வு சாதி தருமமன்மையின், 'வடு' என்றார். 'வாய்சோரா' எனக் காரியம் காரணத்துள் அடக்கப்பட்டது.)
விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் - தன் அரசன் சொல்லி விடுத்த செய்தியை வேற்றரசரிடம் சென்று கூறுபவன்; வடுமாற்றம் வாய்சோரா வன்கணவன் - தனக்கு நேரக்கூடிய தீங்கிற்கு அஞ்சி வாய்தவறியும் தாழ்வான சொற்களைச் சொல்லாத திண்ணிய நெஞ்சனாயிருத்தல் வேண்டும். வடு-குற்றம். தாழ்வான சொற்களைச் சொல்லுதல் தன் தகுதிக் கேற்காத குற்றமாதலின், ' வடுமாற்றம்' என்றார். வாய் சோராமைக்கு ஏதுவான வன்கண் என்க.
கலைஞர் உரை:
ஓர் அரசின் கருத்தை மற்றோர் அரசுக்கு எடுத்துரைக்கும் தூதன், வாய்தவறிக்கூட, குற்றம் தோய்ந்த சொற்களைக் கூறிடாத உறுதி படைத்தவனாக இருத்தல் வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை:
தம் அரசு சொல்லிவிட்ட செய்தியை அடுத்த அரசிடம் சொல்பவன், அங்கே சந்திக்க நேரும் ஆபத்திற்கு அஞ்சி, வாய் தவறியும் தவறான செய்தியையோ, இழிவான சொற்களையோ சொல்லிவிடாத ஆற்றல் பெற்றவனாக இருக்க வேண்டும்.
Translation
His faltering lips must utter no unworthy thing,
Who stands, with steady eye, to speak the mandates of his king.
Explanation
He alone is fit to communicate (his sovereign's) reply, who possesses the firmness not to utter even inadvertently what may reflect discredit (on the latter).