|
|||||
சுவாமிஜியின் சிகாகோ உரை தினம் !! |
|||||
சென்னையில் சிறப்பு சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் ஓர் அங்கமாகத் திகழும் விவேகானந்தர் பண்பாட்டு மையத்தின் சார்பில் செப்.11ம் தேதியை சிறப்பாகக் கொண்டாட திட்டமிட்டுள்ளனர். சுவாமி விவேகானந்தர் "பாரதப் பெருமையைப் பாருக்குப் பறைசாற்றிய தினம்" என இந்த தினம் கொண்டாடப் படுகிறது. செப்.11, வியாழக்கிழமை மாலை 5.30 முதல் இரவு 8 மணி வரை சென்னை கடற்கரை - விவேகானந்தர் இல்லத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாகத் திகழப்போவது, சுவாமிஜியைப் பற்றி அன்பர்கள் என்ன தெரிந்து வைத்துள்ளார்கள் என்பதை வெளிக்கொணருவதுதான்! அன்று காலை விவேகானந்தர் இல்லத்தின் வெளிப்புறச் சுவரில் ஒரு பேனர் வைக்கப்போகிறார்கள். சுமார் 140 அடி நீளத்துக்கு இருக்கும் பேனரில் விவேகானந்த அன்பர்கள் தங்களுக்குப் பிடித்த விவேகானந்தரின் ஒரு வீரமொழியை அதில் எழுதி அவரவர் பக்தியை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பு ஏற்படுத்தியிருக்கிறார்கள். அன்றைய தினம் சுவாமிஜியின் சிகாகோ உரையை அனைவரும் சேர்ந்து வாசித்தல் ஒரு சிறப்பு நிகழ்வு. சுவாமி கௌதமானந்தஜி மகராஜ் ஆசியுரை வழங்க, கிருஷ்ணஸ்வாமி அசோஷியேட்ஸ் தயாரித்து பொதிகை டிவியில் ஒளிபரப்பான சுவாமி விவேகானந்தர் தொடரில் இடம்பெற்ற சிகாகோ பிரசங்கக் காட்சியை திரையிடப் போகிறார்கள். சுவாமிஜியின் சிகாகோ உரை எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்பதற்கு ஓர் உதாரணம்... உலகில் இதுவரை நிகழ்ந்த சொற்பொழிவுகளில் மிகச் சிறந்தது எது? என்ற கேள்வி, இண்டெலிஜெண்ட் லைஃப் என்ற ஆங்கிலப் பத்திரிகையால் புகழ்பெற்ற ஆறு எழுத்தாளர்களிடம் கேட்கப்பட்டதாம். அப்போது லண்டன் பிபிசியின் இந்திய நிர்வாகத் தலைவராயிருந்த மார்க் டல்லி, சுவாமி விவேகானந்தர் 1893ஆம் ஆண்டில் சிகாகோவில் உலக சர்வ சமயப் பேரவையில் ஆற்றிய உரையையே சிறப்பானதாகத் தேர்வு செய்தார். சுவாமிஜியின் வாக்கு அன்றைக்கும் இன்றைக்கும் பொருத்தமாக உள்ளது என்றார் டல்லி. 472 வார்த்தைகள் அடங்கிய பெருமிதம் மிக்க முழக்கத்தால் சுவாமிஜி பாரதத்தின் பெருமையை உலகுக்குப் பறை சாற்றினார். மேலும், பிற சமயத்தவர்களின் ஆன்மாவையும் மீண்டும் ஒரு முறை உயிர்ப்பித்தார் அவர். சுவாமிஜி இந்தியாவின் ஆன்மிகத்தையும் கலாசாரத்தையும் உயர்ந்த பீடத்தில் ஏற்றி, உலகம் அதைப் போற்றவும் ஏற்கவும் செய்தார். அந்தத் திருநாளே செப்டம்பர் 11. இந்த தினத்தைச் சொன்னாலே சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் சர்வசமய மாநாட்டில் உரை நிகழ்த்தியது நினைவுக்கு வர வேண்டும். இந்தியாவின் ஆக்கச் செய்தியை, ஆன்மிகச் செய்தியை அமெரிக்காவுக்கு அளித்து உலகுக்கு இந்தியாவின் ஆன்ம ஒளியை அறியச் செய்த நிகழ்வு அது. ஆனால், பின்னாளிலோ பயங்கரவாதத்தின் கோர முகத்தை இதே செப்.11ல் இரட்டை கோபுரத்தைத் தகர்த்து பல ஆயிரக் கணக்கான உயிர்களைக் கொன்று, அழிவுச் செய்தியை உலகுக்கு உணர்த்திய தினமாக இது பிரபலப்படுத்தப்பட்டது உலகின் துரதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும் |
|||||
by Swathi on 10 Sep 2014 0 Comments | |||||
Tags: Vivekananda Chicago Speech Day விவேகனந்தர் சிகாகோ உரை தினம் | |||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|