LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 804 - நட்பியல்

Next Kural >

விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச் செயலையும் விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
நட்டார் கெழுதகையான் கேளாது செயின் - தம் கருமத்தை நட்டார் உரிமையாற் கேளாது செய்தாராயின்; விழைதகையான் வேண்டி இருப்பர் - அச் செயலது விழையப்படுந்தன்மை பற்றி அதனை விரும்புவர் அறிவுடையார். (ஒருவர்க்குத் தம் கருமம் தாம் அறியாமல் முடிந்திருத்தலின் ஊங்கு நன்மை யின்மையின், அச்செயல் விழையத்தக்கதாயிற்று. அதனை அவ்வாறு அறிந்து விரும்புதல் அறிவுடையார்க்கல்லது இன்மையின் அவர்மேல் வைத்துக் கூறினார். 'வேண்டியிருப்பார்' என்பது எழுந்திருப்பார் என்பதுபோல ஒரு சொல் நீர்மைத்து. இதனான் கேளாது செய்துழி அதனை விரும்புக என்பது கூறப்பட்டது.)
மணக்குடவர் உரை:
நட்டோர் தமது உரிமையாலே கேளாது இசைவில்லாதவற்றைச் செய்வாராயின் அதற்கு முனியாது அதனையும் தாம் விரும்பும் தன்மையோடே கூட விரும்பத் தப்பாதிருப்பர் மிக்கார். இஃது உடன்படுதலன்றி விரும்பவும் வேண்டு மென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
நட்டார் கெழுதகையால் கேளாது செயின்-பழைமையான நண்பர் தம்மைக் கேட்டுச் செய்ய வேண்டிய ஒரு வினையைத் தம் உரிமையாற் கேளாது செய்தாராயின்; விழைதகையான் வேண்டியிருப்பர் - அறிவுடையார் அதன் விரும்பப்படுந் தன்மை பற்றி அவரைத் தமக்கு வேண்டியவராகக் கொள்வார். தம் ஏவலாற் செய்யப்படுவதான ஒரு கருமத்தைத் தம் ஏவலின்றியே செவ்வையாய்ச் செய்து முடித்தாராயின், செய்தவரை "ஏவா மக்கள் மூவா மருந்து" என்று அறிவுடையார் பாராட்டுவதல்லது வேறுவகையாகக் கருதி வெறுக்கார் என்பதாம். செய்தற்குரிய செயப்படு பொருளும் வேண்டியிருத்தற்குரிய வினை முதலும் வருவிக்கப்பட்டன.
கலைஞர் உரை:
பழகிய நட்பின் உரிமை காரணமாக தமது நண்பர் தம்மைக் கேளாமலே ஒரு செயல் புரிந்து விட்டாலும்கூட நல்ல நண்பராயிருப்பவர் அதனை ஏற்றுக் கொள்ளவே செய்வார்.
சாலமன் பாப்பையா உரை:
தம் நண்பர் உரிமை எடுத்துக் கொண்டு தம்மைக் கேளாமலேயே ஒரு காரியத்தைச் செய்தால் அக்காரியத்தைத் தாம் அறிந்திருந்தாலும் நண்பரால் விரும்பிச் செய்யப்படுவது என்பதனால் அறிவுடையார் அதை ஏற்றுக் கொள்ளவே செய்வர்.
Translation
When friends unbidden do familiar acts with loving heart, Friends take the kindly deed in friendly part.
Explanation
If friends, through the right of friendship, do (anything) without being asked, the wise will be pleased with them on account of its desirability.
Transliteration
Vizhaidhakaiyaan Venti Iruppar Kezhudhakaiyaar Kelaadhu Nattaar Seyin

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >