திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
விழித்த கண் - பகைவரை வெகுண்டு நோக்கிய கண்; வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின் - அவர் வேலைக்கொண்டு எறிய அஃது ஆற்றாது அந்நோக்கை அழித்து இமைக்குமாயின்; வன்கணவர்க்கு ஒட்டு அன்றோ - அது வீரர்க்குப் புறங்கொடுத்தலாம். (அவ்வெகுளி நோக்கம் மீட்டலும் போரின்கண் மீட்சி எனக்கருதி அதுவும் செய்யார் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
மாற்றாரோடு எதிர்த்துச் சிவந்து நோக்கின கண்ணிலே ஒரு வேலினாலே எறிய, அதற்கு மீண்டும் இமைப்பாராயின் அஃது அஞ்சாதார்க்குக் கெட்டதனோடு ஒக்கும். விழித்தகண் என்பதற்கு மாற்றானை நோக்கி யிமையாத கண் எனினும் அமையும்.
தேவநேயப் பாவாணர் உரை:
விழித்தகண்-பகைவரைச் சினந்து நோக்கி விரிவாகத் திறந்தகண்; வேல்கொண்டு எறிய அழித்து இமைப்பின்-அவர் ஒளிவீசும் வேலைப் பளிச்சென் றெறிய, அதற்குக் கூசி முன்னை நிலைக்கு மாறாக இமை கொட்டின்; வன்கணவர்க்கு ஓட்டு அன்றோ-அதுவும் உண்மை மறவர்க்குப் புறங்கொடுத்தலாகுமன்றோ!. 'அழித்து' என்பது 'அழித்தழுதாள்' குறள் (1317) என்பதிற் போல நின்றது. 'ஒட்டு' தோற்றோடல். இங்கு ஓட்டென்றது ஓட்டாகக் கருதப்படுதலை. சிறந்த மறவர் தம் கண்ணுரத்தினால் முறுத்த நோக்கும் மறுத்த நோக்கார் என்பதாம்.
கலைஞர் உரை:
களத்தில் பகைவர் வீசிடும் வேல் பாயும்போது விழிகளை இமைத்து விட்டால்கூட அது புறமுதுகுகாட்டி ஓடுவதற்குஒப்பாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பகைவரைச் சினந்து பார்க்கும் கண், அவர்கள் எறியும் வேலைப் பார்த்து மூடித் திறந்தாலும், சிறந்த வீரர்க்கு அதுவே புறங் கொடுத்தலாகும்.
Translation
To hero fearless must it not defeat appear,
If he but wink his eye when foemen hurls his spea
Explanation
Is it not a defeat to the valiant to wink and destroy their ferocious look when a lance in cast at them (by their foe) ?.