எரிமலை இல்லாத நாடுகளில் இந்தியாவும் ஓன்று என நாம் நினைத்து கொண்டிருக்கின்றோம், ஆனால் நமது நினைப்பை பொய்யாக்கும் விதமாக தற்போது ஒரு புதிய செய்தி வெளியாகியுள்ளது. சென்னையின் அருகில் எரிமலை இருப்பதுதான் அந்த புதிய செய்தி, இந்த செய்தியை உறுதி செய்வதற்காக மூன்று நிறுவனங்கள் எரிமலை குறித்த ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. சென்னையிலிருந்து சுமார் 100 முதல் 110 கிலோ மீட்டர் தொலைவில் கடந்த 1757 ஆம் ஆண்டில் எரிமலை ஒன்று வெடித்து லாவாவை கக்கியதாகவும், மேலும், அந்தப் பகுதி முழுவதும் கடல் நீரின் நிறம் மாறியதாகவும், ஒரு வெளிநாட்டு மாலுமி தனது பயணக் குறிப்பில் குறிப்பிட்டிருந்தார். இதே போன்று சில விஞ்ஞானிகளும் தங்களது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளனர். பெயர் சூட்டப்படாத இந்த எரிமலை குறித்த தகவல் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் இதுவரை எந்த விளக்கத்தையும் வெளியிடாமல் இருந்தது.இதனிடையே பூவுலகின் நண்பர்கள் என்ற சமூக அமைப்பினர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த எரிமலை குறித்த தகவலை இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்திடம் கேட்டுள்ளனர்.எரிமலை இல்லை என்று மறுப்பு தெரிவிக்காத அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், எரிமலை இருப்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை என் தகவல் அளித்துள்ளது, இருப்பினும் இந்திய புவியியல் ஆய்வு நிறுவனம், தேசிய கடலியல் ஆய்வு நிறுவனம், மற்றும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் ஆகியவை வங்கக் கடலில் எரிமலை இருக்கிறதா? என்பதை அறியும் ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புதிய தகவலையும் வெளியிட்டுள்ளது.
|