காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்வதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இரண்டு நாட்களில் 17 அடி அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் மழை தீவிரம் அடைந்ததையடுத்து கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த செவ்வாய்க்கிழமை மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, அதிகபட்சமாக வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. இதில் உச்சபட்சமாக நேற்று முன்தினம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்தது. நீர்வரத்து மேலும், மேலும் அதிகரித்ததால் நேற்று மாலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 38 அடியாக உயர்ந்தது. இந்த நிலையில் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் தற்போது அணை மின்நிலையம் வழியாக வெளியேற்றப்படுவதால், அங்கு கடந்த ஏழு மாதங்களுக்கு பிறகு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கி நடந்து வருகிறது. நீர்வரத்து எதிரொலியாக கடந்த 6 நாட்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 23 அடி உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருவது விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் மழையின் அளவு குறைந்து விட்டதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது.
|