ஏரியான்ஸ்பேஸ் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட இந்திய செயற்கைக்கோள், இன்சாட் 3டி நேற்று வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, வானிலை ஆராய்ச்சி மற்றும் பேரிடர் எச்சரிக்கைகளுக்காக, இன்சாட் 3டி என்ற செயற்கைக்கோளை, வடிவமைத்தது. இந்த செயற்கைக்கோள், பிரான்ஸ் நாட்டின் வர்த்தக பயன்பாட்டு ராக்கெட்டான, ஏரியன்ஸ்பேஸ் மூலம் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டது. மேலும் இன்சாட் 3டி செயற்கைக்கோலுடன், ஐரோப்பிய நாடுகளின், மிகப் பெரிய தொலைத்தொடர்பு செயற்கைக் கோளான, "ஆல்பாசாட்'டையும் ஏரியன்ஸ்பேஸ் ராக்கெட் சுமந்து சென்றது. விண்ணில் சீறிப் பாய்ந்த ராக்கெட், 32 நிமிடங்கள், 48 வினாடிகளில், "இன்சாட் 3டி' செயற்கைக்கோளை, பூமியிலிருந்து, 36 ஆயிரம் கி.மீ.,யில் நிறுத்தியது. அடுத்த சில வினாடிகளில், இந்திய செயற்கைக்கோளில் உள்ள சூரிய ஒளி பேனல்கள் விரிந்து, மின்சாரத்தை உற்பத்தி செய்து, "இஸ்ரோ' கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பை ஏற்படுத்தியது. அதையடுத்து, அந்த செயற்கைக் கோளின் முழு கட்டுப்பாடும், இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இன்னும் சில நாட்களில், அந்த செயற்கைக்கோளில் உள்ள, சுயமான உந்துசக்தியின் மூலம், மேலும் உயரமான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து, இந்தியா மட்டுமின்றி, இந்தியப் பெருங்கடல் பகுதி நாடுகளின் எல்லைகள் மற்றும் வானிலையை, "இன்சாட் 3டி' ஆராயும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
|