மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து கொண்டு என்னை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி உள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார். மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையட்டி, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் சாந்த்பாரா என்ற இடத்தில் முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி தனது பிரசாரத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது, கற்பழித்து கொல்லப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறுவதற்காக கடந்த திங்கட்கிழமை காம்துனி கிராமத்துக்கு சென்றேன். அங்கு என்னை கொல்ல சதி திட்டம் வகுக்கப்பட்டு இருந்தது. இதை எனது மெய்க்காப்பாளர்கள் பின்னர் என்னிடம் தெரிவித்தனர். உளவுத்துறை தகவலும் இதை உறுதிப்படுத்தி உள்ளது.மேலும் மாவோயிஸ்டுகளுடன் சேர்ந்து என்னை கொலை செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திட்டம் வகுத்திருந்தனர். இதற்காக உள்ளூர் மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகர், தனது ஆட்களை கிராம மக்களுடன் ஊடுருவ விட்டிருந்தார். மேற்கு வங்காளத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்காக, என்னை கொலை செய்யும் திட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி தீட்டி உள்ளது. மக்களும், பூமியும் என்னுடன் இருக்கும் வரை, அவர்கள் என் தலைமுடியைக் கூட தொட முடியாது என அவர் தெரிவித்தார்.
|