மயில்போல மங்கை - இது மயிலை மங்கைக்கு உவமையாகச் சொல்கின்ற வாக்கியம். ஒன்றை மற்றொன்றுக்கு உவமை கூறுவது அதன் நோக்கம். இங்கே மயில் என்பது உவமானம். மங்கை என்பது உவமேயம். போல என்பது உவம உருபு.
உருபு உருபு’ என்று நான் எழுதுந்தோறும் அடிக்கடி பயன்படுத்துகிறேனே, உருபு என்றால் என்ன... அது உறுப்பு என்பதைப்போலவா...? ஒன்றும் குழம்ப வேண்டா.
உருபு என்பதும் சொல் என்று கருதத்தக்க ஓர் உருப்படி. அது தனியெழுத்தாகவோ கூட்டெழுத்துகளாகவோ இருக்கும்.
சொல்லுக்குள்ளதுபோல் உருபுகளுக்கு உறுதியான திட்டமான பொருள் இல்லை. ஆனால், அவற்றுக்குச் சொல்லோடு கூடி பொருளுணர்த்தும் பொறுப்புண்டு.
இப்போது உவம உருபுக்கு வருவோம். நம்மில் பெரும்பாலோர் ‘போல’ என்ற உவம உருபைப் பயன்படுத்தி எழுதுவோம். நான் வேடிக்கையாகக் குறிப்பிடுவதுண்டு, நவீன எழுத்தாளர்களிடமிருந்து ‘போலிருந்தது’ என்ற சொற்றொடரைப் பறித்துக்கொண்டால் அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுவிடும். அத்தனை தடவை ‘போலிருந்தது’ போட்டு எழுதுவார்கள்.
என்னவோ போலிருந்தது. பேசாமல் திரும்பிவிடலாம் போலிருந்தது. இப்போது தேவலாம் போலிருந்தது.
இந்தப் ‘போல’ என்ற உவம உருபைப்போலவே இன்னும் பல உருபுகள் தொடுவாரின்றிக் கிடக்கின்றன. அவற்றையும் எடுத்து அங்கங்கே பயன்படுத்தலாம் என்பது என் பரிந்துரை.
போல, புரைய, ஒப்ப, உறழ, மான, கடுப்ப, இயைய, ஏய்ப்ப, நேர, நிகர, அன்ன, இன்ன, ஆங்க, மான, விறப்ப, என்ன, தகைய, பொருவ -- ஆகியனவே அவை.
உவம உருபுகளுக்குத் திட்டமான பொருளில்லை, ஒன்றை மற்றொன்றுக்கு உவமை கூறத் தோன்றுகின்றன, அவ்வளவே...! பிற உவம உருபுகளையும் பயன்படுத்தி எழுதினால் ‘போல்படும்பாடு’ குறையும்.
உவம உருபுகளைப் பயன்படுத்திச் சில வாக்கியங்களை அமைப்போம்.
1. போல - வானத்தைப்போல மனம்படைத்த மன்னவனே !
2. புரைய - குயில்புரையக் கூவியழைத்தாள் அவள் (இங்கே புரைய என்பதை ஒலிசார்ந்தவற்றுக்கு உவம உருபாக்குவது சிறப்பு)
3. ஒப்ப - மயிலொப்ப ஆடிய மாதவியாள்.
4. கடுப்ப - தீக்கடுப்பச் சொன்ன வார்த்தைகள்
பிறவற்றுக்கும் ஓய்ந்த நேரத்தில் வாக்கியங்கள் அமைத்துப் பாருங்கள் !
- கவிஞர் மகுடேசுவரன்
|