|
||||||||
அடுத்த தலைமுறைக்கு தமிழை எடுத்து செல்ல நாம் என்ன செய்யவேண்டும்? |
||||||||
பிற மொழிகளின் ஆதிக்கம், மற்றும் வெளிநாட்டு கலாச்சாரம் ஆகியவற்றால், தமிழ் எங்கே அழிந்துவிடுமோ, என அஞ்சிய காலத்தில், தமிழ் மொழியை, கணினியிலும், அலைபேசிகளிலும் பயன்படுத்தும் மின்னணு மொழியாக, மாற்றிய சில தமிழ் அறிஞர்களுக்கு முதலில் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். ஏனெனில், இவர்கள் இதை செய்யவில்லை என்றால், உலகில் உள்ள மொழிகளில் சிறந்த மொழியாம் தமிழ் மொழி இன்னும் சில ஆண்டுகளில் அழிந்திருக்கும்.
ஆரம்பத்தில், தமிழ் மொழி, கணினியில் மின்னணு மொழியாக வந்த போது, அதை மின்னஞ்சலில், தகவல் தொடர்பில் தமிழ் மக்கள் பெரிதும் பயன்படுத்தவில்லை. ஆனால், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களின் வரவால், தமிழ் தட்டச்சு பலகையின் வாயிலாக எளிமையாக எல்லோரிடமும் சென்று சேர்ந்தது. தமிழ் மொழியை பயன்படுத்தவே மாட்டேன் என்று சொல்லும் நபர்களும் கூட வேறு வழியின்றி தமிழை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது தமிழில் செய்தி வெளியிட்டால் தான் அது தமிழக மக்களிடம் சென்று சேருகிறது என்ற உண்மை அறிந்த பின் சமூக வலைத் தளங்களில் உள்ள பிரபலங்கள் கூட தமிழில் தட்டச்சு செய்யத் தொடங்கிவிட்டனர். இப்படி கணினியில் மெல்ல மெல்ல தமிழ் வளர்ச்சி அடைந்தாலும், அலைபேசியில் தமிழை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையோ மிக குறைவு தான். அலைபேசியில் தொழில்நுட்ப பிரச்சனைகள், தமிழை பயன்படுத்த இயலாமை, விரும்பாமை போன்ற காரணத்தால் தமிழ் மொழி வளராமல் இருந்தது. ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் தமிழ் மொழியின் பயன்பாடு அதிகரித்து வருவதால் , பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் சந்தையை விரிவுபடுத்த அலைப்பேசியில் தமிழ் மொழியை அறிமுகம் செய்து வருகின்றன. ஏற்கனவே நோக்கியா, எச் டி சி போன்ற அலைபேசிகளில் மின்னணு தமிழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது சாம்சங் அலைபேசி நிறுவனம் கூட முழுக்க முழுக்க அனைத்து செயலிகளையும் தமிழில் பயன்படுத்தும் வசதியை உருவாக்கியுள்ளது. அதாவது தமிழை அலைபேசியில் செயலாக்க மொழியாகவே நாம் பயன்படுத்தலாம். விளையாட்டு, அரட்டை, இசைக் கருவிகள், மற்ற தொழில் நுட்பங்கள் அனைத்தும் தமிழ் மொழியில் பயன்படுத்தலாம். இதன் மூலம் தமிழ் மொழி தமிழர்களிடையே கலப்பில்லாமல் சென்றடையும். மக்களும் இதுபோன்ற தமிழ் கலைசொற்களை தங்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தலாம். தமிழை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல அலைபேசியை தமிழ் வழியில் மாற்றுவது இன்றியமையாத ஒன்றாகும். மேலும் அலைபேசிகளில் தமிழ் மொழியன் பயன்பாடு அதிகரித்தால், தமிழ் படித்த இளைஞர்களுக்கு முன்னணி அலைபேசி நிறுவங்களில் வேலை வாய்ப்பு அதிகரிக்கும். மேலும் புதிய கலைசொற்களை உருவாக்கவும், தமிழில் புதிய தொழில் நுட்பங்களை மேம்படுத்தவும் இது பெரிய அளவில் துணை புரியும். எப்படி பேஸ்புக்கை தமிழில் பயன்படுத்த தொடங்கிய பின்பு பேஸ்புக் வலைதளம் தமிழ் மொழிக்காக பல்வேறு வசதிகளை உருவாக்கி கொடுத்ததோ அவ்வாறே இந்த அலைபேசி நிறுவனங்களும் அதை சார்ந்த மென்பொருள் நிறுவங்களும் தமிழ் மொழியில் பல்வேறு வசதிகளை தமிழர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கும். தமிழ்படித்த தமிழர்களுக்கு வேலை வாய்புகள் பெருகும். ஆகவே இதை படிக்கும் தமிழர்கள் அனைவரும் தங்களுடைய அலைபேசியை தமிழுக்கு மாற்ற முயற்சி செய்யவும்.
இயல், இசை, நாடகத்தமிழாக வளர்ந்து வந்த நம் தமிழ், தற்போது, மின்னணு தமிழாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதை தமிழர்கள் அனைவரும் முறையான வழிகளில் பயன்படுத்தினால், அழிந்து வரும் மொழிகளில் இருந்து தமிழ் மொழியை காப்பாற்றி, நம் அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கலாம். எனவே, நாம் தமிழ் மொழி பயன்பாட்டை அதிகரிப்போம், தமிழ்மொழி வளர்ச்சிக்கு துணை நிற்போம்.
வாழ்க தமிழ் !! வளர்க தமிழின் பெருமை !!! |
||||||||
by Swathi on 26 Aug 2013 4 Comments | ||||||||
கருத்துகள் | ||||||||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|