வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
கடவுள் எங்கேயோ இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவன் மனிதனின் மன இயக்கத்தில் இருக்கிறான். ஆம், தெய்வம் அதற்குள்ளாகவும் இயங்கிக் கொண்டிருக்கிறது. வேறுவேறாக இல்லை, இறைவன் மனிதனிடம் ஒன்றுபட்டுத் தான் இருக்கிறான். அனால் மனிதனுடைய எண்ணத்தின் காரணமாக, இச்சையின் காரணமாக, பல பொருட்களின் மீது வைத்திருக்கிற ஆசையின் காரணமாக, இறைவன் தூரத்தில் இருப்பது போல் மனிதனுக்குத் தோன்றுகிறது. இச்சையின் அடுக்குகளே இறைவன் தூரத்தில் இருப்பது போல் செய்து வருகின்றன.
நமக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் இருக்கிறது என்று ஒரு கணக்கெடுக்க வேண்டுமா? எத்தனை பொருட்களின் மீது ஆசை இருக்கிறதோ, வரிசையாக எழுதி பட்டியலிட்டால் அது இருக்கும் நீளத்தைக் கொண்டு இவ்வளவு தூரம் தான் நமக்கும் கடவுளுக்கும் இருக்கக் கூடிய தூரம்.
பொருட்களின் மீது இருக்கக் கூடிய ஆசைகள் எவ்வளவோ, அந்த அளவுக்குக் கடவுளுக்கும், மனிதனுக்கும் உள்ள தூரம் அதிகமாகும். ஆகவே, ஆசை என்பதைச் சீரமைத்து விட்டோமேயானால், இறைவனைக் காணலாம். ஆசையை அனுமதித்துக் கொண்டே இருந்தால், அதை ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு ஆண்டும் செயலாக்கிக் கொண்டு தான் இருப்போம். அந்த வகையில் வேலை இருந்துக் கொண்டே இருக்கும். அனால் ஆசை சீரமைக்கப்பட்டது என்றால், ஒரு பளுவும் இல்லை. ஆகையினால் மனம் துல்லியமாக, நிறைவாக இருக்கும். அங்கே இறைவன் இருப்பான். - தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
|