LOGO
  முதல் பக்கம்    அரசியல்    கட்டுரை/நிகழ்வுகள் Print Friendly and PDF
- ஆம் ஆத்மி (AAM aadmi)

ஏன் ஆம் ஆத்மியில் நான் சேர்ந்தேன் ? - ஞானி

ஆம் ஆத்மி கட்சியில் நான் சேர்ந்துவிட்டேன் !

என் 44 வருடப் பொது வாழ்க்கையில் நான் உறுப்பினராக சேரும் முதல் கட்சி இதுதான்.இதுவரை கட்சிகளில் சேராவிட்டாலும், நான் எப்போதும் அரசியலில் இருந்து வருகிறேன் என்றுதான் சொல்லவேண்டும். அரசியல் என்றால் கட்சி, அமைப்பு, இயக்கம் ஒன்றில் சேர்ந்து பணியாற்றுவது என்று மட்டுமாக புரிந்துகொள்வதே பொது வழக்கம். நான் அந்த அரசியலைக் குறிப்பிடவில்லை. எனக்கு அரசியல் என்றால், சமூகத்தில் கட்சி அரசியல், தேர்தல் அரசியல், குடும்ப அரசியல், கலாசார அரசியல் என்று பல தளங்களில் அரசியல் செயல்படுகிறது. சமூகம் பற்றிய பார்வை, சமூகத்துக்கான மதிப்பீடுகள், சமூகத்துக்கான செயல்கள் எல்லாம் அரசியல்தான்.அப்படி எல்லா தளங்களிலும், துறைகளிலும் நடப்பவை, நடந்தவை, நடக்கவேண்டியவை பற்றி எல்லாம் கருத்துகளை மக்கள் முன்னால் தொடர்ந்து வைப்பதும் ஓர் அரசியல் செயல்பாடுதான். எழுத்தாளனாக நான் எப்போதும் அதைத்தான் செய்துவந்திருக்கிறேன்.


அரசு, அரசியல், தேர்தல், பொது வாழ்க்கையில் செயல்படுதல் முதலியவை பற்றியெல்லாம் எனக்கு முதலில் ஈடுபாடு ஏற்பட்டது என் அப்பா வேம்புசாமியால்தான். ஆங்கிலப் பத்திரிகையாளராக இருந்த அவர்(1907-1997), அறுபதுகளில் நான் சிறுவனாக இருந்தபோது ராஜாஜி, நேரு, காமராஜ் பற்றியெல்லாம் அவ்வப்போது சொல்லக் கேட்டிருக்கிறேன். ராஜாஜி, காமராஜ் இருவரோடும் அவருக்கு நெருக்கமான பழக்கம் இருந்தது. ஆனால் அவருக்கு அதில் ராஜாஜியைப் பிடிக்காது. காமராஜைத்தான் பிடிக்கும். அண்ணா அவருடைய கல்லூரி தோழர். நேருவோடு பழக்கம் இல்லாதபோதும் நேருதான் அப்பாவுக்கு நவீன இந்தியாவுக்கான ஆதர்சம். சாதி, மத, கடவுள், சடங்குகள் எல்லாம் அப்பாவின் பார்வையில் , அவரது வாழ்க்கை முறையில் முக்கிய இடத்தை ஒருபோதும் பெறவே இல்லை. அறுபதுகளில் அப்பா நிறைய பொது வேலைகளில் செங்கல்பட்டில் ஈடுபட்டிருந்தார். வரி கொடுப்போர் சங்கம் என்ற ஒன்றை அவரும் நண்பர்களும் நடத்தினார்கள். அறுபதுகளில் அது ஓர் அபூர்வமான முயற்சி. நுகர்வோர் உரிமை, சிவிக் ரைட்ஸ் எல்லாம் பரவலாகப் பேசப்படாத காலம். அந்த சங்கத்தில் தொடர்ந்து நகராட்சியுடனும் அரசுடனும் சாலை, விளக்கு, சாக்கடை, குடிநீர் பிரச்சினைகளுக்காக அவர்கள் கடிதங்கள், மனுக்கள், கூட்டங்கள், அதிகாரிகளுடன் சந்திப்புகள் என்று பல விதங்களில் தீர்வுகளுக்கு முயற்சித்துக் கொண்டே இருந்தார்கள். செங்கல்பட்டில் பெண்களுக்கான கல்லூரிக்கு போராடிப் போராடி கடைசியில் ஓர் அரசு பெண்கள் கல்லூரியும் ஓர் அரசு மருத்துவக் கல்லூரியும் ஏற்பட, அப்பாவும் நண்பர்களும் உழைத்த உழைப்பே காரணம். அப்பா ஏற்படுத்திய இன்னொரு சங்கமும் அந்த காலகட்டத்தில் இந்தியாவிலேயே அபூர்வமானது. தினசரி செங்கல்பட்டிலிருந்து 35 மைல் தொலைவில் இருக்கும் சென்னைக்கு படிக்கவும் வேலை பார்க்கவும் சென்று திரும்பும் ஆயிரக்கணக்கான ரயில் பயணிகளுக்கான சங்கம் அது. அப்போது காலையில் இரு ரயில்கள் மட்டுமே காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டு வழியாக சென்னைக்கு இருந்தன. இந்த சங்கம்தான் போராடி மூன்றாவது ரயிலைக் கொண்டு வந்தது. சென்னை விழுப்புரம் ரயில்பாதையை மின்தடமாக்கியதும் அவர்களின் தொடர்ந்த போராட்டம்தான். அடுத்து சென்னைக்கும் செங்கல்பட்டுக்கும் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்கவும் அவர்களே போராடி வரவழைத்தார்கள். இந்தப் போராட்டங்களெல்லாம் சுமார் 15 ஆண்டுகள் தொடர்ந்து நடந்து பின்னர் பயன் கொடுத்தவை. அப்பா விளையாட்டு வீரரும் கூட. (அவரிடமிருந்து நான் அடையாத நல்ல விஷயங்களில் அது ஒன்று.) எனவே அவர்தான் செங்கல்பட்டு மாவட்டத்துக்கான பால் பாட்மிண்ட்டன் சங்கத்தையும் கால்பந்து சங்கத்தையும் நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்கினார்.


இவற்றையெல்லாம் பள்ளி மாணவனாகவும் கல்லூரி மாணவனாகவும் உடன் இருந்து பார்த்த அனுபவங்கள் எனக்கு முக்கியமானவை. இயக்கம், அமைப்பு, உள்அரசியல், வெளி அரசியல் பற்றியெல்லாம் என் புரிதலுக்கான ஆரம்பப் பாடங்கள் அவை.


அதன்பின் நான் நேரடியாக அரசியல் செயல்பாட்டில் இறங்கியபோது எனக்கு வயது 17. கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். என் பள்ளித் தோழன் ரவீந்திரன் தீவிர தி.மு.க அனுதாபி. அப்போது 1971ம் வருட மக்களவை தேர்தலும் மாநில சட்டப்பேரவை தேர்தலும் ஒன்றாக நடந்தன.இந்திரா காந்தி வங்கிகளை நாட்டுடைமையாக்கி ராஜமான்யத்தை ஒழித்து சோஷலிச சிற்பியாக இருந்தார். அவருடன் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க கூட்டணி சேர்ந்தது. இந்திய தமிழகப் பிற்போக்காளர்களின் தமிழகத் தலைவராக காமராஜும் ராஜாஜியும் என் அப்பாவின் நண்பர் ஆத்தூர் சீனிவாசய்யரின் மகன் சோ ராமசாமியும் ஓரணியில் இருந்தனர். அப்பா இந்திரா- கருணாநிதி அணியையே ஆதரித்தார்.நானும்தான். ரவீந்திரன் கேட்டுக் கொண்டபடி நான் அந்த அணிக்காக செங்கல்பட்டிலும் தாம்பரத்திலும் ( என் கல்லூரி இருந்த இடம்) பொதுக் கூட்டங்களில் பேசினேன். லாரியில் மேலே நின்றுகொண்டு மைக்கில் முழக்கங்களும் உரையும் நிகழ்த்தியபடி சுற்றுப் பயணப் பிரசாரம் செய்தேன். அப்பாவுக்கும் எனக்கும் மிக நெருக்கமாக இருந்த பல குடும்பத்தினர் எதிர் அணி ஆதரவாளர்கள். கறுப்பு சிவப்பு கொடியின் கீழ் நின்று பேச உனக்கு கூச்சமாக இல்லையா, வெட்கமாக இல்லையா என்றெல்லாம் என் நண்பர்களின் பெற்றோர் அப்போது என்னைக் கேட்டிருக்கிறார்கள்.
அநதத் தேர்தலின் வாக்குப்பதிவு தினத்துடன் நான் அரசியல் பணிகளிலிருந்து சட்டென்று முறித்துக் கொண்டு விலகிவிட்டேன். அதன்பிறகு நான் மறுபடியும் நேரடியாக கட்சி சார்ந்த அரசியலில் தேர்தலையொட்டி ஈடுபட்டது 16 வருடம் கழித்து 1987லிருந்து 1990 வரையில்தான். இப்போது ராஜீவ் காந்தி ஆட்சி நடந்துகொண்டிருந்தது. அதன் ஊழலை எதிர்த்து வி.பி.சிங் ஜன் மோர்ச்சா தொடங்கியிருந்தார். அடுத்தகட்டத்தில் அவருடன் தி.மு.கவும் இன்னும் பல மாநிலக் கட்சிகளும் சேர்ந்து தேசிய முன்னணியை உருவாக்கினர். நான் ராஜீவின் ஊழல் எதிர்ப்பு, மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்பாக இந்திய அரசியல் ஃபெடரல் முறையை நோக்கிப் போவதற்கான ஆதரவு என்ற அடிப்படைகளில் இதில் வேலை செய்தேன். வி.பி.சிங்கின் மொழிபெயர்ப்பாளனாக சுமார் 70 கூட்டங்களில் பேசினேன். முரசொலியில் ஒரு வருட காலம் வாராந்தர இணைப்பாக ‘ புதையல்’ பகுதியை காங்கிரஸ் எதிர்ப்புப் பிரசாரத்துக்காக தயாரித்து வந்தேன். சிவாஜி கணேசன் தலைமையில் இருந்த தமிழக ஜனதா தளம் சார்பில் மண்டல் கமிஷனை ஆதரித்தும் மந்திர் கிளர்ச்சியை எதிர்த்தும் பிரசார பிரசுரங்கள், கேசட்டுகள் உருவாக்கி வெளியிட்டேன். தமிழகத்தில் 1989ல் தி.மு.க ஆட்சியைப் பிடித்ததும் மறு நாள் முரசொலி வேலையை விட்டு விலகினேன்.டெல்லியில் வி.பி.சிங் ஆட்சி கவிழ்ந்தபின்னர் அந்த தொடர்புகளிலிருந்தும் நீங்கினேன்.


இப்படி ஓரிரு முறை நேரடி அரசியலில் களப் பணி செய்தபோதும் நான் எந்தக் கட்சியிலும் உறுப்பினராகவில்லை. தி.மு.கவின் தீவிர ஆதரவாளரும் நண்பரருமான மறைந்த சின்னக் குத்தூசியிடம் கூட ‘புதையல்’ காலகட்டத்தில் சிலர் கேட்டதாக அவர் என்னிடம் சொன்னார். ஞாநி தி.மு.கவா, ஜனதா தளமா என்று. இரண்டும் இல்லை, அவர் ஞாநி அவ்வளவுதான் என்று பதில் சொன்னதாக சிரித்தபடி சின்னக் குத்தூசி தெரிவித்தார். இவை தவிர நேரடி கட்சி அரசியலில் நான் எப்போதும் இருக்கவில்லை.

 

அதே சமயம் எழுபதுகளின் கடைசியில் கல்லூரிப் படிப்பு முடித்ததிலிருந்து இன்று வரை, பல்வேறு இடதுசாரி கட்சிகளின், குழுக்களின் ( சிபிஐ, சிபிஎம், சிபிஎம்எல், வெவ்வேறு நக்சல்பாரி இயக்கங்கள்) ஆகியோரின் மேடைகளில், முன்னணி இயக்கங்களின் கூட்டங்களில் பொதுப் பிரச்சினைகள், சிவில் உரிமைகள், கலாசார உரிமைகள், மனித உரிமைகள், மகளிர் உரிமைகள் போன்றவற்றுக்காக தொடர்ந்து அவ்வப்போது பேச்சாளனாக இருந்துவருகிறேன். இவை தவிர எண்பதுகளிலிருந்து போபால் கொடூரம் முதல் இன்று கூடங்குளம் அணு உலை வரை வெவ்வேறு சுற்றுச் சூழல் இயக்கங்களில் பங்களிப்பவனாக இருந்து வருகிறேன்.1983 முதல் 1990 வரை ஈழத்தமிழர் உரிமைப் பாதுகாப்புக்கான கூட்டமைப்பின் செயற்குழுவில் சாலை இளந்திரையன், வி.சி.குகநாதன், மு.மேத்தா, சுப.வீரபாண்டியன் ஆகியோருடன் பணியாற்றினேன். ராஜீவ் ஜெயவர்தனே ஒப்பந்தத்தையும் இந்திய அரசின் அமைதிப்படை இலச்ங்கைக்கு அனுப்பப்பட்டதையும் கண்டித்து அப்போது  மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தியதில் முக்கிய பங்கு எனக்கும் இருந்தது. முப்பதாண்டுகளுக்கு மேலாக மரண தண்டனை ஒழிப்புக்காக எழுதியும் பேசியும் வந்திருக்கிறேன்.


இப்படிப்பட்ட நான் ஏன் இப்போது ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தேன் ?


இந்தியாவில் காங்கிரஸ், பா.ஜ.க, தமிழகத்தில் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய நான்கு கட்சிகளுக்கு எதிராக மாற்று உருவானால்தான் இந்திய தமிழக அரசியலில் ஆரோக்கியமான மாற்றங்கள் வரமுடியும் என்பதில் எனக்கு சந்தேகமே இல்லை. இந்த மாற்றத்தை இடதுசாரி அமைப்புகள் ஏற்படுத்தியிருக்கமுடியும். ஆனால் தற்காலிக அரசியல் சிக்கல்களை சந்திக்கும் போக்கால், அது நடக்காமலே போய்விட்டது. தவிர ஒற்றை சித்தாந்த அடிப்படையில் இயங்கி மக்களைத் திரட்டுவது ஒரு பற்றாக்குறையோ என்று எனக்குத் தோன்றுகிறது.


நமக்கு காந்தி, அம்பேத்கர், பெரியார், மார்க்ஸ், விவேகானந்தர், நாராயண குரு, பாரதி, நேரு, பகத்சிங் என்று பலரிடமிருந்தும் எடுத்துக் கொள்ள நிறைய உள்ளன என்று எப்போதும் நான் நம்புகிறேன். ஒருவரிடமிருந்து எடுக்கும்போது இன்னொருவரை நிராகரிக்கும் போக்கும் ஒருவரிடமிருந்து மட்டுமே எல்லாம் கிடைத்துவிடும் என்று பிடிவாதமாக நம்பும் மூர்க்கமும் எனக்கு உடன்பாடில்லை. எனவே ஒற்றை சித்தாந்த அடிப்படை இல்லாமல், திறந்த மனதுடன் அரசியலை அணுகும் வாய்ப்பு இருக்கும் கட்சியாக இன்று ஆம் ஆத்மி உருவாகியிருப்பதால், பல ஆரோக்கியமான அரசியல் அம்சங்களின் தொகுப்பாக அது வளரும் வாய்ப்பு இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. டெல்லியில் காங்கிரசுக்கும் பிஜேபிக்கும் மாற்றாக இன்னொரு சக்தி இருக்கமுடியும் என்று மக்கள் நம்பிக்கையை தூண்டியதால் இன்று நாடு முழுவதும் ஆம் ஆத்மிமீது ஆங்காங்கே எதிர்பார்ப்பு இளைய தலைமுறையிடம் மலர்ந்திருக்கிறது. அதே போல தமிழ்நாட்டிலும், தி.மு.க, அ.தி.மு.கவுக்கு மாற்றாக ஒரு சக்தியாக வரவேண்டியவை எதுவும் இன்னும் வளரவில்லை. வந்தவையெல்லாம் அவற்றின் குளோன்களாகவே இருப்பவை. அந்த இடத்தையும் ஆம்


ஆத்மி என்ற எளிய மக்கள் கட்சி பூர்த்தி செய்யும் வாய்ப்பிருக்கிறது.
ஆம் ஆத்மியின் செய்லபாடுகள் பற்றி கடும் விமர்சனங்களை பல நண்பர்கள் என்னிடம் சொல்கிறார்கள். அதன் வருகையால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் பிஜேபி கடும் எதிர் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கிறது. எனக்கும் விமர்சனங்கள் உண்டு. ஆனால் அவை ஆம் ஆத்மி வளரவேண்டும் என்ற அக்கறையினால் சொல்பவை. அது அழியவேண்டும் என்ற ஆசையில் முன்வைப்போருடையவை அல்ல. காங்கிரஸ் கட்சிக்கு 129 வயது. பி.ஜே.பிக்கு ஆர்.எஸ்.எஸ்  தோன்றிய நாளிலிருந்து கணக்கிட்டால் 89 வயது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 94 வயது. திராவிட இயக்கக் கட்சிகளுக்கு வயதை நீதிக்கட்சியிலிருந்து கணக்கிட்டால், 97 வயது. ஆம் ஆத்மி உருவாகி ஒரே ஒரு வருடம்தான் ஆகிறது. துடிப்பான குழந்தை இது. நல்ல போஷாக்கான உணவு தரும் பெற்றோரும் நல்ல கல்வி தரும் ஆசிரியர்களும்தான் குழந்தையை சிறந்த மனிதனாக உருவாக்கமுடியும். அப்படிப்பட்ட அக்கறையுள்ள பெற்றோர்களாக, ஆசிரியர்களாக நாடு முழுவதும் பல துறை அனுபவம் உடையவர்கலும் அங்கே இன்று இனைகிறார்கள்.  அதில் நானும் ஒருவன். ‘இந்தக் குழந்தை எங்கே உருப்படப் போகுது’ என்று கரித்துக் கொட்டும் எதிர்வீட்டுக்காரரின் அசல் பிரச்சினை அவர் குழந்தைகள் உருப்படாமல் போய்விட்டதுதான்.


1967, 1977, 1987 என்று தேர்தல் அரசியலில் மாற்றத்துக்கான அறிகுறிகள்  தோன்றிய வரிசையில் இது அடுத்த மாற்றம் தென்படும் காலம். முந்தைய மாற்றங்கள் எல்லாம் வீணானது போல இதுவும் ஆகிவிடக் கூடாது என்ற கவலையில், இதற்கான என் பங்களிப்பாக, அந்த மாற்றத்தை நோக்கி இன்னும் பலரையும் உந்த உற்சாகப்படுத்தும் சக்தியாக இருப்பதற்காகவே நான் கட்சி, தேர்தல் அரசியலில் இறங்கியிருக்கிறேன்.


இதற்கு என் தற்போதைய உடல்நிலை இடம் தருமா என்ற ஒரு கேள்விதான் என் மீது பெரும் அன்பு வைத்திருக்கும் நண்பர்களுக்கும் இருக்கும் முக்கியமான கேள்வி. உண்மையில் நான் இப்போது களத்தில் இறங்குவததற்கு முக்கிய காரணமே  என் உடல்நிலைதான். அறுபது வயதாகும் நான் இப்போதைய நிலையில் இன்னும் அதிகபட்சம் பத்தாண்டுகள் இருக்கலாம். எஞ்சியிருக்கும் இந்த ஆண்டுகளில், எஞ்சியிருக்கும் என் சக்தியை, கடந்த 40 வருடங்களாக நான் அவாவிய பல்வேறு மதிப்பீடுகளுக்கான சூழல் உருவாக என்னாலியன்றதை செய்துவிட்டுப் போய்விடவேண்டும் என்றே விரும்புகிறேன். நமக்குத் தொழில் எழுத்து, எழுத்துக்கு அப்பாலும் நாட்டுக்கு உழைத்தல், இமைத் திருக்கும் பொழுது வரை சோராதிருத்தல்…..

by Swathi   on 17 Mar 2014  0 Comments
Tags: Aam Athmi Party   AAP   Gnani   AAP Gnani   ஆம் ஆத்மி   ஞானி     
 தொடர்புடையவை-Related Articles
தேர்தலில் போட்டியிட்டதில் இரண்டாவது அதிக இடங்களில் போட்டியிட்டு ஆம் ஆத்மி சாதனை.. தேர்தலில் போட்டியிட்டதில் இரண்டாவது அதிக இடங்களில் போட்டியிட்டு ஆம் ஆத்மி சாதனை..
2014-பாராளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி தமிழகத்தில் பெற்ற வாக்குகள் 2014-பாராளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி தமிழகத்தில் பெற்ற வாக்குகள்
2014-பாராளுமன்றத் தேர்தலில் எழுத்தாளர் ஞானி பெற்ற வாக்குகள் 2014-பாராளுமன்றத் தேர்தலில் எழுத்தாளர் ஞானி பெற்ற வாக்குகள்
2014 தேர்தலில் அணு உலை போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம் 2014 தேர்தலில் அணு உலை போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் பெற்ற வாக்கு விவரம்
ஆலந்தூர் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியில் சமீபத்தில் இணைந்த திரு.ஞாநி போட்டியிடுகிறார். ஆலந்தூர் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியில் சமீபத்தில் இணைந்த திரு.ஞாநி போட்டியிடுகிறார்.
ஏன் ஆம் ஆத்மியில் நான் சேர்ந்தேன் ? - ஞானி ஏன் ஆம் ஆத்மியில் நான் சேர்ந்தேன் ? - ஞானி
விரைவில் ஊழல் செய்த மாநில அரசியல் தலைவர்களின் பட்டியல் வெளியிடப்படும் - ஆம் ஆத்மி !! விரைவில் ஊழல் செய்த மாநில அரசியல் தலைவர்களின் பட்டியல் வெளியிடப்படும் - ஆம் ஆத்மி !!
ஆம் ஆத்மி தமிழகத்தில் சாதிக்குமா? ஆம் ஆத்மி தமிழகத்தில் சாதிக்குமா?
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.